பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

அறத்தின் குரல்


“நீங்கள் இப்போது உடனே உங்கள் நாட்டின் அரசுரிமையை அடைய முயலவேண்டாம். நேரே காடு சென்று பன்னிரண்டு ஆண்டுகளை எவ்வாறேனும் அங்கு வாழ்ந்து கழித்து விடுங்கள். அதற்குப் பின் ஏதாவது ஒரு நகரில் எவரும் நீங்கள் பாண்டவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு விடாதபடி அஞ்ஞாதவாசம் செய்ய வேண்டும். ஒரு விஷயத்தில் மட்டும் எச்சரிக்கை அவசியம். அஞ்ஞாதவாச காலத்தில் உங்களை எவரேனும் பாண்டவர்களென்றும் அடையாளம் கண்டு கொண்டால் மீண்டும் பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வசிக்க நேரிடும். இதற்கு அவசியம் ஏற்படாமல் பதின்மூன்று ஆண்டுகளைக் கழித்து விட்டு மீண்டும் வாருங்கள், பழையபடி உங்கள் நாடு, அரசுரிமை எல்லாம் உங்களுக்குத் திரும்பிக் கொடுக்கப்படும்.” துரோணர் கூறிய இதே தீர்மானத்தை மூதறிஞராகிய வீட்டுமரும் ஆமோதித்தார்.

இவர்கள் கூறியவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த திரௌபதி துணிவை வரவழைத்துக் கொண்டு, ‘நானும் என் கணவன்மார்கள் பிச்சை கேட்டு வாங்கிக் கொண்டு போவது போல இவர்களிடம் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றுக் கொண்டு போக விரும்பவில்லை. என் கணவர் மறுபடியும் சூதாடியே எங்களை அடிமைத்தனத்திலிருந்து வென்று மீட்டுக் கொள்வார்” என்று கூறினாள். யாவரும் திகைத்துப் போயினர். திரெளபதியின் யோசனையைத் தருமனும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டான். இம்முறை வெற்றி என் கணவர் பக்கம் ஏற்பட வேண்டும் என்று தன் இஷ்ட தெய்வமான கண்ணபிரானைத் தியானித்துக் கொண்டாள் திரெளபதி. தருமனும் கண்ணபிரானை எண்ணிவாறே ஆட ஆரம்பித்தான். ஆடத் தொடங்கும்போதே சகுனி மிகப் பெரியதோர் தடையைக் குறுக்கே நுழைத்தான்.

“சூதாட ஆசைப்படுவதெல்லாம் சரிதான் தருமா! ஆனால், எந்தப் பொருளைப் பந்தயமாக வைத்து ஆடப்