பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

அறத்தின் குரல்


“துருவாசரே! துரியோதனாதியர்கள் இம்மாதிரிச் செய்து விட்டார்களே என்று அவர்கள் மேல் சினம் கொண்டு தாங்கள் சாபம் ஏதும் கொடுத்துவிடக் கூடாது என்பதே அடியேன் வேண்டுகோள். “துருவாசர் தருமனின் தன்னலமற்ற வேண்டுகோளைக் கேட்டு வியந்தார். தனக்கு நன்மை விளையாவிட்டாலும் பிறருக்குத் தீமை விளைந்தால் போதும் என்றெண்ணும் துரியோதனனின் மனப்பண்பையும், தனக்கு துன்பமே விளைந்தாலும் மற்றவர்களுக்கு நன்மை விளைய வேண்டும் என்று எண்ணும் தருமனின் மனப்பண்பையும் நினைத்துப் பார்த்தார் அவர். ஒன்று மடுவாகத் தாழ்ந்திருந்தது. மற்றொன்று மலையாக உயர்ந்திருந்தது. பின்பு துருவாசரும் கண்ணபிரானும் பாண்டவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றனர். அவர்கள் பழையபடி கானகத்தில் கவலை மறந்து வாழலாயினர். அவ்வாறு வாழ்ந்து வரும் போது ஒரு நாள் திரெளபதி வனப்பகுதியில் உலாவி வரவேண்டும் என்ற ஆசையை அர்ச்சுனனிடம் தெரிவித்தாள். அவள் விருப்பத்தை நிறைவேற்றக் கருதிய அர்ச்சுனன் அவளை அழைத்துக்கொண்டு காட்டில் உலாவுவதற்குச் சென்றான். உலவிக் கொண்டே வரும்போது வழியோரத்தில் தென்பட்ட ஒரு நெல்லி மரத்தைத் திரெளபதி கண்டாள். அந்த வளமான நெல்லி மரத்தில் ஒரே ஒரு நெல்லிக் கனி விளைந்து முற்றித்திரண்ட வடிவோடு தோன்றியது. அதைப் பறித்து உண்ணக் கருதி அர்ச்சுனனிடம் கேட்டாள் அவள்.

அவன் உடனே சிறிதும் சிந்திக்காமல் வில்லை வளைத்துக் குறிதவறாமல் ஓர் அம்பை அந்தக் கனியின் மேல் எய்து அதைக் கீழே வீழ்த்திவிட்டான். வில்லை நாணேற்றிய ஒலியையும் அம்பு கனியை வீழ்த்திய ஒலியையும் கேட்டு அக்கம் பக்கத்திலுள்ள ஆசிரமங்களில் வசித்து வந்த முனிவர்கள் மனம் பதறி வெளிவந்தனர். அர்ச்சுனன் நெல்லிக்கனியைக் கீழே வீழ்த்தியிருப்பதையும் திரெளபதி அவனருகே குனிந்து கனியை எடுக்க முயன்று கொண்டிருப்பதையும் கண்ட அவர்கள் விரைவாக ஓடிவந்து திரெளபதியைத் தடுத்தனர்.