பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



4. ஐந்து நாட்களுக்குப் பின்

ஆறாவது நாள் காலையில் போர் தொடங்கும் பொழுது இரு திறத்துப் படையினரும் தத்தம் படைகளைப் புது வியூகங்களில் வகுத்து நிறுத்தினர். பாண்டவர் சேனையைத் துட்டத்துய்ம்மன் மகரமீன் வடிவமாகவும், கெளரவர் சேனையை வீட்டுமன் அன்றில் பறவையின் வடிவமாகவும், வகுத்து நிறுத்தியிருந்தார்கள். போர் தொடங்கியதும் இதுநாள் வரை இல்லாத அபூர்வ சந்திப்பாக வீமனும் துரோணரும் தங்களுக்குள் நேர் எதிரெதிரே வில்லும் கையுமாகச் சந்தித்தார்கள். தனக்கு ஆசிரியராக இருந்த துரோணரோடு கூட அஞ்சாமல் ஆண்மையோடு விற்போர் புரிந்தான் வீமன். துரோணனையும் அவனுடன் சேர்ந்து மற்ற ஆட்களையும் வீமன் தாக்கிக் கொண்டிருக்கும்போது சல்லியன் குறுக்கிட்டு, “ஏ! வீமா... இதோ நான் தயார்! என்னோடு போருக்கு வா!” -என்று வீமனை அழைத்தான். வீமன் சல்லியனைப் பார்த்து ஏளனமாக நகைத்துக் கொண்டே “என்னுடன் சரிசமமாக எதிர் நின்று போர் செய்ய உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? நீ ஏற்கனவே பல முறை எனக்குத் தோற்றவனாயிற்றே?” என்று இகழ்ந்து கூறிப் போர் தொடங்கினான். சல்லியனுக்கும் வீமனுக்கும் போர் நடந்தது. வீமன் சல்லியனுடைய வில்லை முறித்து வீழ்த்தி விட்டு அவனைத் தேரோடு தூக்கித் தரையில் ஓங்கி அடித்தான். எதிர்பாராத இந்த அதிர்ச்சியினால் சல்லியனுடைய வலிமை முற்றிலும் அடங்கி ஒடுங்கிப் போய்விட்டது. சல்லியன் தளரவும் துரியோதனன் சில ஆட்களோடு வீமனை எதிர்க்க வந்தான். துரியோதனனும் அவனுடன் வந்தவர்களுமாகச் சேர்ந்து வீமன் மேல் அம்பு மழை பொழிந்தார்கள். அதைச் சமாளிப்பதற்காகத் திட்டத்துய்ம்மன், கடோற்கசன் முதலியவர்கள் வீமனுக்கு