பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

யாளர் பலரையுயும் உடன் அழைத்துச் சென்றான். அவ்வாராய்ச்சியாளர்கள் எகிப்து நாட்டில் தங்கி, அந்நாட்டின் பழமையான நாகரிகத்திற்குக் காரணமாக விளங்கிய சின்னங்களையெல்லாம் ஆராயத் தொடங்கினர்.

தேனான் என்ற ஆராய்ச்சியாளர், பெரு முயற்சி எடுத்துக் கொண்டு தம் ஆய்வுகளை நிகழ்த்தினார்; தம் ஆராய்ச்சிகளின் பயனாக வெளிப்பட்ட உண்மைகளை யெல்லாம் ஒன்று திரட்டி இருபத்து நான்கு பகுதிகளடங்கிய ஒரு பெரு நூலாக எழுதி வெளியிட்டார். “எகிப்து நாட்டின் வருணனை” என்பது அந்நூலின் பெயர் ஆகும். அந்நூல் வெளியானவுடன் எகிப்து, உலக மக்களின் கவனத்தைக் கவரத் தொடங்கியது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் எகிப்து நாட்டில் வந்து கூடினர். பழமைச் சிறப்பைப் பறைசாற்றிய வண்ணம் நிமிர்ந்து நிற்கும் அச்சின்னங்கள் கண்டோரைப் பெரு வியப்பில் ஆழ்த்தின.

எகிப்து மணலில் புதைந்து கிடந்த எண்ணற்ற சிற்பங்களும், விண்முட்டும் தூண்களும், பரப்பிலுயர்ந்த கற்கோவில்களும், பார்த்தவர்களின் உள்ளத்தை மலைக்க வைக்கும் பிரமிடுகளும், அப்பிரமிடுகளுக்குள் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பாரோ மன்னர்களின் பிணங்களும் அவர்களுடைய அன்றாட உரையாடல்களாகி விட்டன. எல்லா நாட்டு மக்களும் எகிப்து நாட்டுப் பழஞ்சின்னங்களைத் தத்தம் பொருட்காட்சி நிலையங்களில் கொண்டுவந்து சேர்க்கப் போட்டியிட்டனர்.