பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சௌப்திக பருவம்

1. அழிவின் எல்லையில்

வெற்றி எவர் பக்கம் தோல்வி எவர் பக்கம்? - என்று நிர்ணயிக்க வேண்டிய பதினெட்டாம் நாள் போரும் தொடங்கிவிட்டது. தருமனும் சல்லியனும் நேருக்கு நேர் எதிர்த்துப் போர் புரிந்தனர். சல்லியனுடைய சங்கநாதம் விண்ணதிரச் செய்தது என்றால், தருமனுடைய சங்கநாதம் திசையதிரச் செய்தது. வாயால் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய பகைமையின் ஆத்திரத்தை எல்லாம் வில் முனையில் பேசித் தீர்த்துக் கொண்டார்கள் இருவரும். யாராவது ஒருவரை யாராவது ஒருவர் தோற்கச் செய்து விடவேண்டும் என்ற மாதிரி அவர்களிருவரும் கங்கணம் கட்டிக்கொண்டு போர் செய்வது போலத் தோன்றியது.

நேரம் ஆக ஆகச் சல்லியன் கை ஓங்கியது. தருமனுக்குத் தேரோட்டிக் கொண்டிருந்த சாரதியின் தலையை அறுத்து வீழ்த்தினான், சல்லியன். தேரின் மேலிருந்த குடையின் மேற்பகுதியையும் உடைத்துவிட்டான். இவற்றையெல்லாம் பார்த்தபோது தருமனுடைய தளராத நெஞ்சமும் சிறிது தளர்ந்தது. நல்லவேளை! அப்போது அருகில் போர் செய்து கொண்டிருந்த வீமன் தருமனுக்கு உதவியாக வந்து சல்லியனை எதிர்த்தான். வீமன் வரவு கண்ட தருமன், ‘நம்மைக் காட்டிலும் சல்லியனை எதிர்ப்பதற்கு வீமனே தகுதி வாய்ந்தவன்’ என்று எண்ணிக் கொண்டு தான் ஒதுங்கிக் கொண்டான்.

இதனால் வீமனுக்கும் சல்லியனுக்கும் நேரடிப் போர் தொடங்கிற்று. மந்திர சக்தி வாய்ந்த அம்புகளை ஒருவர் மேல் ஒருவர் செலுத்திக் கொண்டனர். இவர்களுக்கிடையே நிகழ்ந்த கடும் போரைத் தருமன் பார்த்துக் கொண்டிருந்தான். சல்லியன் மேல் சினமுற்ற வீமன் விற்போரை நிறுத்திவிட்டுக்