பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15-வது அதிகாரம் மாரனோ, ராஜகுமாரனோ! கபட சன்னியாசியினது மடத்தில் அகப்பட்டுக்கொண்ட இளைய நங்கையான ஷண்முகவடிவின் கதி எப்படி முடிந்தது என்பதைக் கவனிப்போம். அந்த மடத்தினது இரண்டாவது கட்டின் பின்புறத்திலிருந்த ஜன்னலண்டை நின்று, வெளித் திண்ணையிலிருந்து சன்னியாசியும், குடியர்களும் சம்பாஷித்த விவரங்களையும், அவர்கள் கடைசியாகச் செய்து கொண்ட தீர்மானத்தையும் உணர்ந்து கொண்ட அந்த இளந்தோகையின் நிலைமை வாக்கினால் விவரிக்கவும் மனதினால் யூகிக்கவும் அசாத்தியமான பரம சங்கடமான நிலைமையாக இருந்தது. அதுவரையில் தான், மகா புண்ணியமூர்த்தி என்று மதித்து, முழுதும் நம்பிக்கை வைத்துத் தொடர்ந்து வந்த மனிதனான சந்நியாசி மகாகாமதுரனான பரமதுஷ்ட மனிதன் என்பதையும், அவன் மற்ற முரடர்களினது உதவியால் தன்னைப் பலாத்காரம் செய்து தனது கற்பை அழிக்கப் போகிறான் என்பதையும் உணர, அவள் திடீரென்று புலி, கரடி, சிங்கம், யானை முதலிய கொடிய விலங்குகளிடையில் அகப்பட்டுக் கொண்டவள் போலவும், ஆலகால விஷங்களைக் கொண்ட மகா பயங்கரமான நாகப் பாம்புகளால் வளைத்துக் கொள்ளப் பட்டவள்போலவும், பிரம்மாண்டமான அக்கினித்தணலுக்குள் நுழைந்துவிட்டவள் போலவும், திடீரென்று நரகத்திற்குள் புகுந்துவிட்டவள் போலவும் விவரிக்கவொண்ணாவகையில் தத்தளித்துக் கலங்கி, தான் கண்டதும் கேட்டதும் பொய்யோ மெய்யோ என்று பிரமித்தவளாய், தான் அன்று எப்படியும் தனது கற்பை இழக்க நேருமாதலால், அதற்குள் தனது உயிரையே விட்டு விடுவது தக்க காரியமென்று நினைத்தாள்.