பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

357

முடிந்த பின் சிவேதன் படைகளைக் குருகுலப் போர்க்களம் நோக்கி நடத்திச் சென்றான். ‘திமுதிமு’ என்று ஆரவாரித்துப் பொங்கும் கடல் ஒன்று பெருகிக் புரண்டு செல்வது போன்ற பேரோசையுடன் படை நடந்தது. எக்காளங்களின் ஒலி, முரசங்களின் ஒலி, சங்கங்களின் ஒலி என்று படைவீரர்களிடமிருந்து கிளம்பிய வாத்தியங்களின் ஓசை வேறு விண்வெளியை அதிரச் செய்தது. வாள்களும், வேல்களும், மேகத்தைக் கிறுகிற மின்னல் துணுக்குகள் போல மின்னின. அந்தப் படையைத் தரையின் மேல் நடந்து வருகின்ற ஒரு பிரம்மாண்டமான புருஷாகாரத்துக்கு ஒப்பிடலாம். அந்தப் புருஷாகாரத்தின் பிராணன் கண்ணன்! மார்பு தருமன்! முகாரவிந்தம் சிவேதன்! அருச்சுன்னும் வீமனும் தோள்கள்! நகுலனும் சகாதேவனும் கண்கள்! படையூடே வருகின்ற சிறந்த அரசர்கள் யாவரும் அந்தப் பேருருவத்தின் மற்ற உறுப்புகளாக விளங்கினர். யானைகளும் குதிரைகளும், தேர்களும், கொடிகளுமாகக் காலாட்களோடு சென்று கொண்டிருந்தது பாண்டவர்களின் படை என்ற அந்தப் பேருருவம். பாண்டவர்களின் படை ஏற்பாடுகள் இவ்வாறிருக்க, அங்கே துரியோதனாதியர்களின் படை ஏற்பாடுகளும் அணிவகுப்புகளும் எந்த நிலையில் இருக்கின்றன என்று பார்க்க வேண்டாமா?

திடீரென்று சற்றும் எதிர்பாராதவிதமாக இரட்டை ஏற்பாடுகள் ஏமாற்றங்களில் முடிந்துவிட்டன. அவர்களுக்கு. வில்லை ஒடித்துப் போட்டுவிட்டுத் தீர்த்த யாத்திரை கிளம்பிய விதுரனோடு பலராமனும் கிளம்பி விட்டானே என்பது முதல் ஏமாற்றம். களப்பலிக்குச் சம்மதித்திருந்த அரவானை முதல்நாளே பாண்டவர்கள் களப்பலி கொடுத்துவிட்டார்களே என்பது இரண்டாவது ஏமாற்றம், ஏமாற்றம் தாங்க முடியாத நிலையில் அவன் வீட்டுமனை நோக்கி, “வீட்டுமரே! இந்தப் பாண்டவர்கள் சுத்தப் பயந்தாங்கொள்ளிகளாக அல்லவா இருப்பார்கள் போலிருக்கிறது? நாம் களப்பலிக்காகப் பார்த்து வைத்திருந்த