பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4


எழுப்பி அவற்றில் வாழ்ந்தனர் என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன. நெடுநல்வாடை என்னும், சங்க நூலில் பாண்டியன் அரண்மனையின் சிறப்புப் பேசப்படுகின்றது. அவ்வரண்மனையில் மானின் கண்போன்ற சாளரங்கள் (மான் கண் அதர்) இருந்தன வென்றும், கழுநீர் வெளியிற் செல்லச் சிறந்த அமைப்புகள் அதில் இருந்தன வென்றும், அழகிய வேலைப்பாடமைந்த மரக்கதவுகள் பொருத்தப்பட்டிருந்தன வென்றும் நாம் அந்நூலிலிருந்து படித்தறியலாம். அவ்வரண்மனையில் பாண்டிமாதேவி பள்ளி கொள்வதற்கென்று அமைக்கப்பட்டிருந்த அறை கலைச் சிறப்புடன் விளங்கியதென்றும், அவ்வறையின் விதானத்தில் பல வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன வென்றும் அறியலாம்.

ஐம்பெருங்காப்பியங்களில் தலைசிறந்தவை யென்றும், காலத்தால் முற்பட்டவை என்றும் போற்றிப் பாராட்டப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் கட்டடக் கலையின் சிறப்புக்கள் விரித்துக் கூறப்படுகின்றன. இந்திர விழாவைக் காண்பதற்கு வந்த மக்களெல்லாரும் அழகிய மாளிகைகளின் முற்றங்களில் சுண்ணாம்புச் சாந்தினால் அமைக்கப்பட்டிருந்த உருவங்களைக் கண்டு வியந்து நின்றனர் என்று மணிமேகலை கூறுகின்றது. காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரன், சூரியன், சம்பாதி, சிவன், முருகன், திருமால் ஆகியோருக்கு எழுப்பப்பட்டிருந்த கோவில்களின் சிறப்பைச் சிலப்பதிகாரம் பலபடக் கூறுகின்றது.