பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

 பயணம் செய்த மார்க்கோ போலோ என்ற இத்தாலியப் பிரயாணியின் சிலையே இது' என்று வேறு பலர் கூறுகிறார்கள். இப்படியாகப் பல கருத்துக்கள் இச்சிலையைப் பற்றி வழங்குகின்றன. தஞ்சைப் பெரிய கோவிலின் கோபுரத்தை அமைத்த சிற்பி, தன் முன்னறிவால் சோழ மன்னன் சிலையையும், சோழர்களுக்குப் பிறகு தஞ்சையை ஆண்ட பரம்பரைகளையும் வடித்தான் என்றும் கூறுகிறார்கள்.

தஞ்சைப் பெரிய கோவில் கருவறையின் உட்புறச் சுவரில் இராசராசன் காலத்தில் தீட்டப்பட்ட ஓவியங்கள் உள்ளன. அவை இடைக்காலச் சோழர்களின் ஓவியக் கலைச் சிறப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன. இந்த ஓவியங்களின் சிறப்பை உணராத நாயக்க மன்னர்கள், பதினேழாம் நூற்றாண்டில், இவற்றின்மீது சுண்ணச் சாந்தைப் பூசிவிட்டு வேறு ஓவியங்களைத் தீட்டி யிருக்கின்றனர். அச்சாந்து உதிர்ந்துள்ள இடங்களில் சோழர் கால ஓவியங்கள் தென்படுகின்றன. இதைக் கண்டு தமிழ் நாட்டிற்கு வெளிப்படுத்தியவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வரலாற்று விரிவுரையாளராக இருந்து, அண்மையில் காலஞ்சென்ற திரு. ச. க. கோவிந்த சாமிப் பிள்ளையவர்கள். இவ்வோவியங்களைப் பற்றி எழுதிய தம் கட்டுரையில், "இவ்வோவியங்கள் இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டபோது, அதாவது கி. பி. 1010 ஆம் ஆண்டு வாக்கில் தீட்டப்பட்டிருக்க வேண்டும்" என்று குறிப்பிடுகிறார். இவ்வோவியங்களின் சிறப்பைப் பார்ப்போம்.