பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

இன்னதென விளங்கவில்லை. இந்தத் தாசில்தார் முதலிய கைதிகளும், எனக்குக் கீழ் வேலை செய்யும் இன்னும் சிலரும் சேர்ந்து கொண்டு இம்மாதிரி தந்திரம் செய்து என் கையெழுத்தைப் போலப் பொய்க் கையெழுத்திட்டு ரசீதுகளும், உத்தரவுகளும் தயாரித்து வைத்துக்கொண்டு எல்லாப் பணத்தையும் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளுகிறார்கள் என்பதே என்னுடைய அபிப்பிராயம். தாங்கள் என்னுடைய வீட்டைச் சோதனை போட்டுப் பார்க்கச் செய்தால், அவ்விடத்தில் எவ்வளவு பொருள் இருக்கிறது என்பதும், நான் இந்தப் பணத்தை அபகரித்திருக்கிறேனா என்பதும் தெரிந்து போம்" என்றார்.

உடனே அரசன் தாசில்தாரைப் பார்த்து "நீர் என்ன சொல்லுகிறீர்கள்?" என்றார்.

தாசில்தார் "நானாவது, எனக்குக் கீழுள்ள சிப்பந்திகளாவது எவ்விதமான குற்றமும் செய்ததாக யாரும் மெய்ப்பிக்கவில்லை. எல்லாவற்றிற்கும் கணக்குகளும், திவான் சாயப்பினுடைய தாக்கீதுகளும் இருக்கின்றன. நாங்கள் ஊருக்குள் சர்க்கார் கட்டிடத்தில் சர்க்கார் உத்தரவின்படி எங்கள் கடமைகளைச் செய்தோமேயன்றி எவ்வித குற்றமும் செய்யவில்லை. நாங்கள் ஒரு பாவத்தையும் அறியோம்" என்றார்.

அதைக் கேட்ட மகாராஜன் வெகுநேரம் வரையில் ஆழ்ந்து யோசனை செய்தபின் பேசத்தொடங்கி, "இதற்குமுன் இருந்த சிப்பந்திகள் தமது வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை என்று நான் கவர்னர் ஜெனரலுக்கு எழுதி, மகா மேதாவியும் சட்ட நிபுணருமான இந்த மனிதரை வரவழைத்து திவானாக நியமித்து, இனி நம்முடைய ராஜ்ஜிய நிர்வாகம் ஒழுங்காகவும் நீதியாகவும் நடைபெறும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். முன்பு சிப்பந்திகள் சொற்ப சொற்பமாகத் திருடினார்கள். அவர்கள் இன்னின்னார் என்பதும் எளிதில் தெரிந்தது. இப்போது ஜனங்களுடைய பொருளை இவ்வளவு அபரிமிதமாகக் கொள்ளையடிக்கிறது இன்னார் என்பது தெரியவே இல்லை. அவர்கள் தாசில்தார் முதலிய உத்தியோகஸ்தர்களை நியமித்து, சொந்தக் கட்டிடம் கட்டி, பட்டப்பகலில் நாற்காலி மேஜைகள் போட்டுக்கொண்டு பங்கா விசிறி வெண்சாமரம் முதலிய விசேஷ மரியாதைகளுடன்

69