பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல்களில் மேனகாவை அடுத்து மிகப் பிரசித்தி பெற்றது கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார் என்பது. பல மர்மங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்த இந்த நாவலில் தஞ்சைப் பிராந்தியத்தில் அன்று நிலவிய சூழ்நிலை வருணிக்கப்படுகிறது. கதையின் ஆரம்பமே பின்வருமாறு அமைந்திருக்கிறது:

திருக்கண்ணமங்கை என்னும் சிற்றுர் தஞ்சை ஜில்லா விலுள்ள மிக்க இரமணியமான ஒரு ஸ்தலம். அவ்வூரில் எக்காலத்திலும் ஓயாது குயிலினங்கள் தமது தீங்குரலமுதைச் சொரிந்து கொஞ்சிக் குலாவிக் குதூகலமாக வதிந்த தென்னஞ்சோலைகளுக்கிடையில், அச்சிற்றுரின் வேளாளரது தெரு அமைந்திருந்தது. அத்தெருவினிடையிலிருந்த ஒரு பெருத்த மச்சு வீட்டின் கூடத்தில் முப்பத்தைந்து வயதுள்ள ஒரு ஸ்திரீ தென்னங்கீற்று முடைந்து கொண்டிருந்தாள். அவளது கைகள் எவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தனவோ அவ்வளவு சுறுசுறுப்பாகவே அவளது வாயிலிருந்து சொற்களும் வெளிப்பட்டு பக்கத்து அறையில் வாழைப் பூவை அரிவாள்மணையில் வைத்து நறுக்கிக் கொண்டிருந்த ஓர் அழகிய பெண்மணியின் செவிகளில் தாக்கிக் கொண்டிருந்தன.

இவ்வாறு அழகாக சில காட்சிகளை வருணிக்கும் துரைசாமி ஐயங்கார் எழுத்திலே வாசகரைக் கவரும் உத்தி எங்கும் சிறந்து நிற்கிறது. 'கல்கிக்கு முன் அவ்வளவு தெளிவுடனும், அழகுடனும் வசனம் எழுதியவர்கள் வடுவூராரைத் தவிர வேறு யாருமில்லை என்று சொல்லி விடலாம். தமிழ் வாசகர்களின் நாடியைப் பிடித்துப் பார்த்து அறிந்து எழுதிய வர்களில் காலத்தால் முதன்மையானவர் வடுவூர் துரைசாமி ஐயங்கார்...' என்பது க.நா. சுப்பிரமணியத்தின் மதிப்பீடு- (படித்திருக்கிறீர்களா?-2)

வடுவூர் துரைசாமி ஐயங்காரின் செல்வாக்கைப் பயன் படுத்தி, குடும்பச் சூழ்நிலையை வைத்து, ஜனரஞ்சகமான நாவல்களை எழுதியவர் வை.மு. கோதைநாயகி அம்மாள்.

நன்றி: தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும் - சிட்டி,

சிவபாதசுந்தரம்.