பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் - 39 3 பழிகரப் பங்கதம் வஞ்சப்புகழ்ச்சி அணியாகத் தமிழில் கையாளப்படுவதுண்டு. பழிப்பது போல் புகழ்வதும், புகழ்வதுபோல் பழிப்பதும் இந்த அணியின் பண்புகள். இடைக்காலப் புலவர்களான காளமேகம், இரட்டைப் புலவர் ஆகியோரும், பிரபந்தக் காலப் புலவர்களான மாம்பழக் கவிச்சிங்கமும், அட்டாவதானம் சரவணப் பெருமாள் கவிராயர் ஆகியோரும் பழிகரப்பங்கதத்தில் வல்லவர்கள். செம்பொருள் அங்கதம் பாட உணர்ச்சியும் எழுச்சியும் இருந்தால் போதும் பழிகரப்பங்கதம் பாட ஆழ்ந்த புலமையும், நுட்பமும், கற்பனையும் வேண்டும். பாவேந்தர் பாரதிதாசன், கோயில், தொழுகை, வரதட்சணைக் கொடுமை ஆகியவற்றைப்பற்றிப் பாடிய பாடல்கள் பழிகரப்பங்கதத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். ஒரிளம் பாதிரியார் ஒர் ஊரில் மாதாகோயில் பொறுப்பேற்க வந்தார். ஆர்வமும், துடிப்பும் மிக்க அவர், கோயிற்பணிகளில் அளவு கடந்த அக்கறையும் ஈடுபாடும் காட்டினார். முறையாகத் தொழுகைகள் நடத்திப் பாவிகளை இரட்சித்து, மோட்ச சாம்ராஜ்ஜியத்துக்கு அவர்களைத் தகுதியுள்ளவர்களாக ஆக்குவதில் முழுமூச்சாக ஈடுபட்டார். ஒரு நாள் தொழுகையின் போது, சுவிசேஷத்தின் முக்கிய பகுதியை உணர்ச்சி பூர்வமாக மெய்மறந்து விளக்கிக் கொண்டிருந்தார்.