பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

அவன் பல பெரிய மனிதர்களிடம் சென்று தனக்கு ஏதாவது வேலை கொடுக்க வேண்டும் என்று கேட்டுப் பார்த்தான். எவ்விடத்திலும் வேலை கிடைக்கவில்லை. வீட்டிலோ குழந்தைகள் பசியோ பசியோவென்று பறக்கிறார்கள். நோயாளியாகப் படுத்திருந்த மனைவிக்கு மருந்து கொடுக்க வைத்தியர் முன் பணம் கேட்கிறார். மருந்திற்கும் கஞ்சிக்கும் வழி இல்லாமையால், அவளுடைய உயிர் நிமிஷத்திற்கு நிமிஷம் போய்க் கொண்டே இருக்கிறது. அவன் போஜனம் செய்து மூன்று நாட்களாயின. பிறரிடம் போய்த் தனது ஏழ்மைத் தனத்தை வெளியிட்டு யாசகம் கேட்பது அவனுக்கு ஆண்மைத்தனமாகத் தோன்றவில்லை. யாசகம் வாங்குவது, திருடுவது, பொய் சொல்வது முதலிய காரியங்களைச் செய்து வயிற்றை வளர்ப்பதிலும், தானும் தனது பெண்டு பிள்ளைகளும் கூண்டோடு மடிந்து அழிவதே அவனுக்கு சிலாக்கியமாகத் தோன்றியது. அத்தகைய கதியற்ற நிலைமையில், அந்த மனிதன், அந்த ஊரில் இருந்த வரப்பிரஸாதியான ஒரு பிள்ளையார் கோவிலை அடைந்து, பிரதக்ஷிண நமஸ்காரம் செய்து “சுவாமி ஆண்டவனே! விக்ந விநாயகமூர்த்தி! உலகத்தாருடைய இடர்களையெல்லாம் போக்கி, அவர்களுடைய கோரிக்கைகள் நிர்விக்நமாகக் கைகூடும்படி செய்து வைக்கும் சர்வ ஜனரக்ஷக தயா பரனே! இந்த ஏழையின் விஷயத்தில் நீர் இப்படிப் பாரா முகமாய் இருப்பது நியாயமா? கோடானுகோடி ஜனங்கள் உண்டு ஜீவிப்பதற்கு இடங்கொடுக்கும் இந்த மகா அகண்டமான உலகத்தில், நான் ஜீவனோபாயத்திற்கு வழியின்றித் தவிக்கிறேனே! திருடர்களும், சூதாடிகளும், மோசக்காரர்களும் வெகு சுலபத்தில் ஏராளமான பொருளைச் சம்பாதிப்பதும், மகா அலட்சியமாக அதை விரயம் செய்வதுமாய் இருந்து சந்தோஷமாகக் காலந்தள்ளுகிறார்களே. மானமாகவும், நாணயமாகவும், ஒழுங்கான வழியிலும் உழைத்துப் பொருள் சம்பாதிக்க வேண்டுமென்ற கொள்கையை உறுதியாகக் கடைப்பிடித்திருப்பவனான எனக்கு ஒரு வேலை கிடைக்கவில்லை! கடவுளே உம்முடைய நீதிபரிபாலனம் இப்படியும் இருக்குமா? இன்றைய தினம் அந்திப் பொழுதிற்குள் எனக்கு ஏதாவது ஒரு வழி காட்டாவிடில், நானும், என் குடும்பத்தாரும் மாண்டுபோவது நிச்சயத்திலும் நிச்சயம்.

20