பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

_________________முருகு சுந்தரம்___________________________


ஆனால், பாரதியார், தாம் நடத்திய 'இந்தியா' ஏட்டில் இக்கருத்தை எதிர்த்து எழுதினார் :

கைம்பெண் மணத்துக்கு வயது வரம்பு விதிக்கக் கூடாது என்பது பாரதியின் கருத்து. ஏட்டில் பாரதி இதை எதிர்த்தாலும் பாட்டில் எழுதத் துணியவில்லை. ஆனால் பாரதிதாசன் கைம்பெண் மணத்தை ஆதரித்துப் பல கவிதைகள் எழுதியிருக்கிறார்.


கைம்பெண் மணத்தை ஆதரித்துத் துணிச்சலாகக் கவிதை பாடிய முதல் தமிழ்க்கவிஞர், பாரதிதாசன் அவர்களே.


ஆடவரின் காதலுக்கும், பெண்கள் கூட்டம்
அடைகின்ற காதலுக்கும் மாற்ற முண்டோ?
பேடகன்ற அன்றிலைப்போல், மனைவி செத்தால்
பெருங்கிழவன் காதல்செயப் பெண்கேட் கின்றான்!
வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோ!
பாடாத தேனிக்கள் உலவாத் தென்றல்
பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?


இதைவிடச் சிறப்பாகக் கைம்பெண் மணத்தை ஆதரித்து எந்தக் கவிஞரும் எழுத முடியாது.


பழந்தமிழ்ப் பாவலர்கள் உதடு ஒட்டாத கடுந்தமிழில் காப்பியம் செய்வதைப் பெருமையாக நினைத்தனர்.


ஆனால் பாரதி, “எளிய இனிய பாடல்களில் எல்லாருக்கும் எளிதாகப் புரியும் தமிழில் எவன் காப்பியம் செய்கிறானோ அவன் தமிழுக்குப் பெரும் தொண்டு செய்தவன் ஆகிறான்” என்று பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையில் குறிப்பிடுகின்றார். அக்கருத்தை அப்படியே ஏற்றுக் கொண்ட பாரதிதாசன், புரட்சிக்கவி’, ‘எதிர்பாராத முத்தம்', 'பாண்டியன் பரிசு’, ‘தமிழச்சியின் கத்தி போன்ற இனிய காப்பியங்களை எளிய நடையில் எழுதித் தமிழுக்குத் தொண்டு செய்திருக்கிறார்.