பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

பாளையக்காரர்களும் ஒரு முறைக்கு இருமுறை போரில் முறியடித்தனர்.

இந்நிலையில், ‘தென்பாண்டிப் பாளையங்களில், நிலைமையைச் சீர்ப்படுத்தக் கான் சாகிபு ஒருவனால்தான் முடியும்’ என்று கும்பினி அரசாங்கம் கருதியது. அதன் விளைவாக 1756-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14-ஆம் தேதி பிறந்த உத்தரவின் வாயிலாக, கான் சாகிபு மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களின் பேரதிகாரியாக (கவர்னராக) நியமனம் பெற்றான். இந்த உத்தரவின் வாயிலாக, கான் சாகிபு கையில் இம் மாவட்டங்களின் இராணுவ, சிவில் அதிகாரங்கள் யாவும் ஒப்படைக்கப்பட்டன. ‘வசூலிக்கும் கப்பத் தொகையை எல்லாம் திருச்சியில் உள்ள காப்டன் காலியாட்டுக்கு அனுப்ப வேண்டும்’ என்றும் கான் சாகிபுக்கு உத்தரவிடப்பட்டது. கான் சாகிபைப் பேரதிகாரியாக்கிக் கும்பினி அரசாங்கம் பிறப்பித்த இவ்வுத்தரவு ஆர்க்காட்டு நவாபாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால், கான் சாகிப் பேரதிகாரியானதால், நாடு ஒன்றும் சீர் பெறவில்லை. பாளையக்காரர்களுக்குக் கான் சாகிபு என்றால் குலை நடுக்கம். ஆனால், வீரத் தலைவர் பூலித் தேவர் கொடுத்த தைரியத்தை வைத்துக் கொண்டு, நாட்டின் சீர்கேடான நிலைமையையும் பயன்படுத்திக்கொண்டு, பாளையக்காரர்கள் கான் சாகிபுக்குக் ‘கண்ணாம்பூச்சி’ காட்டி வந்தார்கள். கான் சாகிபைக் கண்டால் பதுங்குவதும், அவன் அப்புறம் நகர்ந்தால் பாய்வதுமாக இருந்தனர்.