பக்கம்:கண்ணகிக் கதை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி கதை

51

கள்ளனையான் கொன்றொழித்தல்
கடுங்கோலோ ? வேலின்கொற்றம்
தள்ளரிய துயரத்தாலே
தடுப்பரிய கோபங்கொண்டாய்

வசனம்

"கள்வனைக் கொல்லுதல் கடுங்கோலன்று" என்று கூறிய காவலன் மொழியைக் கேட்ட கண்ணகி, கடுஞ் சீற்றம் கொண்டாள். "கோவலனிடமிருந்து நீர் பெற்ற சிலம்பு, என்னுடைய சிலம்பு; எனது சிலம்பின் பரல்கள் மாணிக்கங்கள் ! உம் தேவியின் சிலம்பிலுள்ள பரல்கள் யாவையோ?" என்று கூறி நின்றாள். "அப்படியா! என் தேவியின் சிலம்புப் பரல்கள் முத்துக்கள்" என்று கூறினான். சேவகனைக் கூவியழைத்தான். கோவலன்பால் பெற்ற சிலம்பைக் கொண்டுவருக என்று கட்டளையிட்டான். சேவகன் சிலம்பைக் கொணர்ந்தான். அதனைத் தன் கையில் வாங்கினாள் கண்ணகி. ஓங்கித் தரையில் எறிந்தாள். சிலம்புள்ளிருந்த மாணிக்கப் பரல்கள் நானா பக்கமும் சிதறின. மன்னவன் திருமுகத்திலும் வந்து பாய்ந்தது ஒரு மாணிக்கம். மாணிக்கத்தைக் கண்ட மன்னன் நாணித் தலை கவிழ்ந்தான். "ஐயோ!' என்று அலறினான்.

பாட்டு

வஞ்சகக் கொல்லன் வாய்மொழி கேட்டேன்
கொஞ்சமும் தேராது கொலைதனைச் செய்தேன்
மன்பதை காத்திடும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுக! என் ஆயுள்
இங்ஙனம் கூறியே இறைமயங் கிட்டான்
தங்குசிங் காதனம் சாய்ந்திட வீழ்ந்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகிக்_கதை.pdf/50&oldid=1298145" இலிருந்து மீள்விக்கப்பட்டது