பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதன் முதலாக, தெய்வத்தன்மையுள்ள தேகத்தைத் திறம்படக் காக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, 1994-ஆம் ஆண்டு “ஓட்டப் பந்தயம்” என்ற திரைப்படத்தை தயாரித்துத் திரையிட்டுள்ளார்.

முதன் முதலாக சென்னைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உடல் நலத்தின் மேன்மையை, கடந்த 30 ஆண்டுகளாக உலகுக்கு உணர்த்தி வந்தார்.

முதன் முதலாக அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகளிலும் கடந்த முப்பது ஆண்டுகளாக தேகநலத்தின் தேவைகளை தெளிவுபடுத்தி வந்தார்.

விளையாட்டுத் துறைபற்றிய கருத்துக்களை கடந்த முப்பது ஆண்டுகளாக, நாளிதழ், வாரஇதழ், மாத இதழ்களில், கட்டுரை, கவிதைகளாக வெளியிட்டுள்ளார்.

முதன் முதலாக ‘உடற் கல்வி மாமன்றம்’ என்ற அமைப்பை 1996ம் ஆண்டுதொடங்கி, மாணவர்களுக்கு தேக நலத்தில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகின்ற தேர்வுப் போட்டிகளை நடத்தி, பல ஆயிரம் ரூபாயைப் பரிசாக வழங்கி பணியாற்றி மகிழ்ந்தார்.

வள்ளுவர் தமது திருக்குறளில் உடல் ஒழுக்கம், உடல் நலம் - ஆன்மபலம் முதலியவற்றை வளர்க்கும் விதத்தை வலியுறுத்தி விளக்கியிருக்கிறார் என்பதை, முதன் முதலாக மாறுபட்டு ஆய்வுசெய்து ‘திருக்குறள் புதிய உரை’ என்னும் நூலில் (அறத்துப்பால் மட்டும்) திருக்குறள் ஓர் உடலியல் நூல் என விளக்குகிறார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க வாழ்க்கை வாழ்ந்த ஒரு சாதனையாளரின் ‘நமக்கு நாமே உதவி’ என்ற நூலினை நாங்கள் வெளியிடுவதில் மகிழ்கிறோம்.

பதிப்பகத்தார்