பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமக்கு நாமே உதவி

13


இப்படியெல்லாம் ‘உதவிகள்’ உதைபட்டு அலைகின்ற ‘உணர்ச்சி பூர்வமான’ நமது வாழ்க்கையில். நமக்கு யார் வந்து உதவுவார்கள்? உற்சாகப் படுத்துவார்கள்? உயர்வைக் காட்டுவார்கள்?

யாருமே இல்லை!

தாழ்ந்தால் ஏசவும், வாழ்ந்தால் முட்டாள்தனமாகப் பேசவும் கற்றுக் கொண்டிருக்கும் சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம்.

கஷ்டப்படும் காலத்தில் உதவுவது போல நடித்துவிட்டு, முன்னேறும் நேரத்தில் முடிச்சுக்களைப் போட்டு முடக்கிவிடுகின்ற தந்திர நரிகளின் தனிக் கவனிப்பிலே நாம் வாழ்கிறோம்.

நமது உயர்வில் சொந்தம் கொண்டாட நினைப்பவர்கள்தாம். நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

பிறர் நமக்கு உதவுவார்கள் என்று நம்புவது பேதமை.

பிறர் உதவினால் பெற்றுக் கொள்ளலாம். நன்றி சொல்லலாம்.

ஆனால், பிறர் நமக்கு உதவுவார்கள், உதவித்தான் ஆகவேண்டும் என்று எதிர்பார்ப்பது மடமை. மடமை நிறைந்த கொடுமை.

நம்மைச் சுற்றி வாழ்கின்ற மக்களெல்லாம் நமக்கு வழிகாட்டிகள். ஆமாம், வழிகாட்டி மரங்கள் இருப்பது போல