பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


காற்றுக்கும் அலைக்கும் பயந்து கொண்டு கப்பலை செலுத்தாமல் இருப்பதில்லை கப்பல் தலைவன்.

பயம் இல்லாமல் ஓட்டுவது ஒருபுறம் இருந்தாலும், பாய்ந்து வரும் அலைகளையும் காற்றையும் தனக்காகப் பயன்படுத்திக் கொண்டு, வெற்றிகரமாகக் கப்பலைச் செலுத்தி, குறித்த இடத்திற்குக் குறித்த நேரத்தில் கொண்டு செல்கிறானே, அவன்தான் சிறந்த தலைவன் ஆவான்.

வாழ்க்கைக் கடலில் விளையாத எதிர்ப்புக்களா? துன்பங்களா? இவற்றை சமாளித்துச் செல்பவன் சாதாரண மனிதன். சமாளிப்பதற்கு மேலே சாதனை புரிகிறவன் தான் சாமர்த்தியசாலி. சந்தோஷக்காரன். பிறர் போற்றும் பெரிய நிலையில் உயர்பவனாவான்.

இது எப்படி முடியும் என்று நீங்கள் திகைப்பது தெரிகிறது!

ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளே அளப்பரிய ஆற்றல், அதிகமான திறமை, நிறைந்து கிடக்கின்றன. அதனைத் தெரிந்து கொள்ளத் தவறுகிறவன் ஜடமாகக் கிடக்கிறான். தெரிந்துகொண்டு பயன்படுத்தாதவன் விலங்காகத் திரிகிறான். தெரிந்து கொண்டு துணிந்து முனைகிறவனே, தேர்ந்து வாழ்கிறான். செழிப்பாக வாழ்கிறான்.

சிறந்த ஞானி என்பவன் எவன்? தன்னைப் பற்றி சிந்திக்கிறவனும், தன்னை உணர்ந்து கொள்பவனுமே அந்த நிலைக்கு உயர்த்தப்படுகிறான்.