நமக்கு நாமே உதவி
21
வலிமையான மக்களும், வலிமையான ஒரு நாடும், நிகழ்காலத்தில் செயல்படுகிறது. இனிய எதிர்காலத்தை உருவாக்குகிறது என்ற ஒரு கருத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
நிகழ்காலத்தில் உழைத்து எதிர்காலத்தில் பலனை எதிர்பார்க்கிற பண்புகள், உண்மையான அறிவாகும். நிகழ் காலத்தில் கனவு காண்பவன், நித்திய நோயாளியாக, வறுமையில் வதியும் கயவாளியாகவே வாழ்வான்.
கனவு கண்டு கொண்டு கிடப்பவனுக்கு கடமையாற்றத் தெரியாது. அவனது உடலும் மனதும் ஒத்துழைக்காது. அவனால் செயல் படவே முடியாது.
‘ஒருவர் ஒரு செயலில் ஈடுபடுவது என்பதே பெரிய காரியம்’ என்கிறார் ஒரு மேல் நாட்டறிஞர்.
ஒரு நல்லசெயலில் இறங்குவதே மகிழ்ச்சியான காரியம். மகிழ்ச்சி என்பதே நல்ல செயலில் ஈடுபடுவதுதான். அந்த செயலில் தான் ஆற்றல்கள் விளையும்!
சில சமயங்களில் செயல்களில் ஈடுபடும் பொழுது மகிழ்ச்சி கிடைப்பதில்லை. ஆனால், மந்தமாக உட்கார்ந்து கிடப்பவர்களுக்கும் மகிழ்ச்சி இல்லையே!
ஆனால் ’காரியம் ஆற்ற முனைகிறவர்களுக்குக் கடவுளே வந்து உதவுவார்’ என்ற ஒரு முதுமொழியையும் இங்கே நாம் நினைவு கூர்வோம்.