பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமக்கு நாமே உதவி

71


அனுமாருக்கு அதனால் விசுவரூபம் எடுக்க முடியும் என்பதை, இராமர் வந்து கூறுகிறவரைக்கும் தெரியாமல் இருந்தது என்பது இராமாயணத்தில் ஒரு குறிப்பு.

அனுமாருக்கு ஒரு இராமர் வந்து உணர்த்துவது போல, யாராவது ஒருவர் உங்களுக்கு வந்து உணர்த்தத்தான் செய்வார்.

அந்தக் குறிப்பை உன்னிப்பாய் கவனித்து உணர்ந்து குறிப்புக் கேற்றபடி தன்னைத் தயார் செய்து கொள்வது தான் சாமர்த்தியசாலிகளின் சிறப்புப் பண்பாகும்.

‘சந்தர்ப்பத்தினை விரைவாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்தவனையே விவேகி’ என்பார்கள்.

அதுபோலவே, தன்னுடைய உண்மை நிலையை உணரும் வாய்ப்புக் கிடைக்கும் பொழுது, எறிந்த பந்து மேலும் மேலும் எகிறிக்குதிப்பதுபோல, செயல்களாற்றுவது தான் சிறந்த மனிதர்களுக்குரிய சத்தியாகும்.

நமக்குள்ளே ஒரு சக்தி என்றால், அது - நமக்கு என்ன தகுதி இருக்கிறது. ஆற்றல் இருக்கிறது என்று அறியும் சக்தி.

நாம் முயன்றால், இதுவே நம்மால் வெற்றி பெற முடியும் என்று விளங்கிக் கொண்டு, தொடங்குகின்ற சக்தி.

இந்த சக்தியானது, நம்முடன் தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிற சக்தியாகும். அதனை அடுத்துக் காண்போம்.