பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தன் தங்கை சிவகாமியிடம் மட்டும் சொல்லியிருந்தால், இந்த கதி தனக்கு நேர்ந்திருக்காது என்று நினைத்தார். இனிமேல் நினைத்து என்ன பயன்? கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எப்படி முடியும்?

இங்கே அநாதைபோல, போலீஸ் ஸ்டேஷனில் அமர்ந்திருந்தார் அற்புதசாமி. தன் தங்கையின் முகவரியைத் தந்தார். எப்படியும் என் தங்கையைப் பார்த்தாக வேண்டும் என்று துடித்தார்.

அவரது மனவேதனையை அறிந்த போலீஸ் ஒருவர் ஏற்பாடு செய்து தருவதாக ஆறுதல் கூறினார்.

‘அப்பா இட்லிப்பா’ என்று முருகன் கேட்டுக் கொண்டேயிருந்தான்.

‘எட்டிப் போடா’ என்று அவனை நெட்டித் தள்ளிக் கொண்டேயிருந்தார். பாசம் எல்லாம் வேஷம், மோசம், என்று அவர் உள் மனம் சொல்லிக் கொண்டேயிருந்தது.

‘இனிமேல் இந்த ஆசையே வேண்டாம்’ என்று தீர்மானம் செய்து கொண்டார். நல்ல முடிவுதானே!