பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா


முதுமையின் தொல்லை வயதாகிப் போவதால் வருவதில்லை. அவர்கள் சுற்றத்தையும் சமூகத்தையும் விட்டு விலகி, தனித்துப் போய் நிற்பதால்தான். தனிமையில் வாழ்வதால் தான்.

இத்தகைய பட்டும் படாத தன்மையும் விட்டு விலகிக் கொள்ள வேண்டும் என்ற வேதாந்தக் கொள்கையும் தான் வயதானவர்களை வாட்டி வதைத்து விடுகின்றன.

அறிவார்ந்த வயதானவர்கள் இப்படியெல்லாம் தங்களை வாட்டி வதைத்துக் கொள்வதில்லை. ஏனென்றால் அவர்களின் சிந்தனையும் தெளிவும் அவர்களை சிறப்பாக இருக்க வைக்கின்றன.

ஒரு குடும்பத்தில் வயதானவர் இருக்கிறார் என்றால், வயதாகி விட்டதே என்பதற்காக அவர் ஒதுங்கிக் கொள்ளக் கூடாது. ஒதுக்கப்படுகிறார் என்றால், அவர் நடைமுறை மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து போகவில்லை என்பதுதான் உண்மை.

அன்றாட நடை முறைகளில் அக்கறை கொள்வது. வருகின்ற விருந்தாளிகளை, சுற்றத்தாரை வரவேற்பது மனம் குளிர உரையாடிக் கொண்டிருப்பது; தேவையான நபர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பது; குடும்ப முன்னேற்றமான காரியங்களுக்குத் துணை நிற்பது தொல்லை தராமல் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது எல்லாம் முதியவர்களால் மகிழச் செய்யும் காரியங்களாகும் மற்றவர்களையும் மகிழ்விக்கும் உதவிகளாகும்.

தன்னை ஒரு பாரமாகக் கருதிக் கொண்டு, தன்னை மற்றவர்கள் பாரமாகக் கருதும் அளவுக்குப்பேசிக் கொண்டும் அன்றாடப் பிரச்சனைகளில் தாமும் போய் விழுந்து, அதிகப் பிரச்சனையாக மாறிக் கொண்டும் இருந்தால், நிச்சயம் நிம்மதியே கிடைக்காது.