பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57

அக்காலத்திலே, செல்வக்குடி பிறந்த சிங்காரிகளும், சுந்தரர்களும் இன்பமாகப் பொழுதைக் கழிக்கவேண்டும் என்பதிலேயே கண்ணுங்கருத்துமாக இருந்தார்கள். வசந்த காலம் வந்துவிட்டால், வெட்டவெளியிலே கிரிக்கெட், ரக்பி, கால்பந்தாட்டம் போன்ற ஆட்டங்களை ஆடினர். மழை காலம் வந்துவிட்டால் என்ன செய்வது?

கூடாரம் அமைப்புள்ள இடங்களிலே ஆடுவதற்கென்று. ஒருசில விளையாட்டுக்கள் தோன்றி தூண்டுதல் செய்தவர்களுக்கு இன்பத்தை அளித்தாலும், பெண்களுக்கு என ஒர் விளையாட்டு இல்லையென்ற ஒருகுறை பெருங்குறையாகவே இருந்து வந்தது.

பெண்கள் ஆடவேண்டும், அதுவும் ஆண்களுடன் அதாவது கணவன், தம்பி, சகோதரன், தங்கை மற்றும் தோழியர்களுடன் சேர்ந்து ஆடுகின்ற ஆட்டமாகவும் இருக்கவேண்டும். அதிகக் கஷ்டமில்லாத விளையாட்டாகவும் இருக்கவேண்டும் என்று விரும்பினர்.

பெண்கள் ஆசைப்பட்டு நடக்காத காரியம் இந்தப் பரந்த உலகில் இருந்ததுண்டோ? அவர்களின் கனவு, மேஜர் விங்பீல்டு மூலமாகவே பூர்த்தியானது. இங்கிலாந்திலே பிறந்து, சைனாவுக்குச் சென்று இராணுவ அதிகாரியாகப் பணியாற்றி, மீண்டு வந்த மேஜர், விளையாட்டிலே ஆழ்ந்த பற்றுடையவர். சிறந்த விளையாட்டு வீரர். பரம்பரை பரம்பரையாக வந்த விளையாட்டு வீரர் பரம்பரையிலே தோன்றியவர்.

புது விளையாட்டைக் கண்டுபிடிக்கத் தொடங்கு முன்னரே, பழக்கத்தில் உள்ள பல விளையாட்டுக்கள் அவரது மனக் கண்முன் வந்து விளையாடிச் சென்றன. அவரது ஆராய்ச்சிக் கண்களும் அவைகளை ஆழ்ந்து நோக்கின.