பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. பந்து தந்த கதைகள்

இதயம் கவர்கின்ற இதிகாசங்கள், புண்ணிய வழியைக் காட்டுகின்ற புராணங்கள், எண்ணற்ற எண்ண எழுச்சியூட்டும் இலக்கியங்கள் எதனை எடுத்தாலும், எத்தனை ஏடுகளைத் திருப்பினாலும், பெண்களுக்கு விருப்பமானது எது என்று நாம் பார்க்கும்போது, ‘பந்தாட்டந்தான்’ என்ற குறிப்பே எங்கும் நிறைந்து கிடக்கிறது.

அகத்திலே அம்மானை ஆடுதல்; அழகுமிகு சோலைகளில் புகுந்து தோழியர்களை தேடிப்பிடித்து விளையாடுதல்; நீர்ச் சுனைகளில் விழுந்து நீந்துதல்; நிழல் தரும் மரங்களில் ஊஞ்சல் ஆடுதல் போன்ற மகிழ்வு தரும் விளையாட்டுக்கள் எத்தனையோ இருந்தாலும், மங்கையர்கள் மனம் கவர்ந்த ஆட்டம் பந்தாட்டமே, குதிரையேற்றம், யானையேற்றம், குத்துச் சண்டை, வீர முழக்கமிட்டு வேல் எறிதல், போர்க்களம் புகுதல் என்று ஆண்மை மிகு நிகழ்ச்சிகளில் எல்லாம் ஈடுபட்டு ஆண்குலம் மகிழ்ந்தபோது, மென்மையும் தன்மையும் நிறைந்த கன்னியர்களின் நெஞ்சமெலாம் பந்தாட்டத்திலேயே மூழ்கிக் களித்தது.