பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இப்படிப்பட்ட புள்ளினங்களில் சில நிலவை உணவாக உட்கொண்டு உயிர் வாழ்கின்றன. சில மழையை உணவாக உட்கொண்டு உயிர் வாழ்கின்றன. இவற்றை வானம்படி, சாதகப்புள் என்றும் கூறுவர். ஆனால் நமது மனித உடலோ, பிறந்த உடனே கிடக்கத்தான் கிடக்கும். எழுந்து நடமாட எத்தனை மாதங்கள் ஆகின்றன? புத்தித் தெளிவோடு பேச எத்தனை ஆண்டுகள் ஆகின்றன? நிலவின் ஒளியையும், மழையையும் உணவாக உட்கொண்டு ஜீவிக்கும் புள்ளினம் போல, உயிர்க்காற்றையே முக்கிய உணவாகக் கொண்டு மனித உடல்கள் ஜீவிக்கின்றன என்பதுதான் உண்மை. இந்த உயிர்க்காற்று தான், ஒருவருக்கு ஜீவக்காற்று, இதைப் பெரிதாக நினைத்து பயன்படுத்துவோர் பெருமை பல எய்துவர் என்று பாடிக் காட்டுகிறார் பைந்தமிழ்ச் சித்தர் திருமூலர். "புள்ளினம் மிக்க புரவியை மேற்கொண்டால் கள்ளுண்ண வேண்டாம் தானே களி தரும் துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்க்கும் உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே” (548) புள் என்றால் பறவை. புரவி என்றால் குதிரை. இங்கே புரவி என்றால் பிராணவாயு. புள்ளாகிய பறவையைக் காட்டிலும் மிக விரைவாக ஒடுகிற குதிரையைப் போன்றது பிராண வாயு. அந்த பிராண வாயுவை உள்ளுக்கிழுத்து நிறைய அகத்தில் அடக்கிக் கொண்டால் ஏற்படும் பயன்கள் எண்ணற்றவை என்கிறார் திருமூலர். இத்தகைய உயிர்ப்பு பயிற்சியுடையோர் யாவரும், துள்ளி நடக்கின்ற பீடு சேர் நடையினர் ஆவர். அவருக்குள் சோம்பல் வராமல் தடுக்கப்படும். எப்போதும் மிடுக்காகவே வாழ்வர். இந்த உண்மையை உடலைக் காக்க வேண்டும் என்று விரும்புகிற உணர்வுடைய மனிதர்களுக்காக உள்ளதைச் சொன்னோம் என்று வலியுறுத்துகிறார்.