பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்

68


27. கேட்டால் கொடுக்கப்படும்!

'மதுரையில் அடிவாங்கியவனுக்கு மானாமதுரையில் மீசை துடித்ததாம் ஆவேசத்தில்' என்று பழமொழி ஒன்று கூறுவார்கள். அடிபட்டவனுக்கு ஆவேசம் அவ்வளவு வேகமாக வந்திருக்கிறது!

எதையும் சுடச் சுட செய்யவேண்டும் என்கிறவர்கள், இந்தப் பழமொழியை அடிக்கடி கூறுவார்கள். ஆமாம்; அந்தந்த நேரத்தில் அந்தந்த வேலையைச் செய்யத் தவறிவிட்டால், எதுவும் நடக்காமல் போய்விடும். எளிதாகப் பெறக்கூடியதையும் இழக்க நேரிடும்!

‘எப்பொழுதோ ஒருமுறை நம்மையறியாமல் நாம் போய்கேட்டால் நடக்காததும் நடந்துவிடும் என்கிற நிலைமையாலும் வாழ்க்கை மாறி அமைவதுண்டு.

விளையாட்டு மட்டும் விதிவிலக்கா என்ன!

இங்கிலாந்து ஆட்டக்காரர்களில், அதுவும் குறிப்பாக, கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் தலையாய இடத்தைப் பெற்றிருப்பவர் காலம் சென்ற W.G. கிரேஸ் என்பவர். தொழிலில் டாக்டராக இருந்தாலும், கிரிக்கெட் ஆட்டத்தில் புலியாக விளங்கியவர்.

தனது 60ம் வயது வரை முதல்தர கிரிக்கெட் ஆட்டம் ஆடி ஓய்வு பெற்றவர். அவர் கிரிக்கெட் ஆடிய நாட்களில் ஒருநாள் நடுவரிடம்அவர்கேட்டார். அது கிடைத்தது. அதுவே ஆட்டத்தில் விதியாக மாறிவிட்டது. வழியாகவும் அமைந்து விட்டது.

கிரிக்கெட் ஆட்டம் நாள் முழுதும் ஆடப்பெற்று, முடிவு அடையக்கூடிய நேரம். W.G. கிரேஸ் பந்தை தடுத்தாடும் குழுவில் (Fielding Side) இருந்து ஆடிக்கொண்டிருக்கிறார். இதுதான் கடைசி பந்தெறி (Last Ball) என்ற எறியும் நிலையில், அந்தப் பந்தானது, பந்தாடுபவரின் கால்மெத்தை (Pads) மீது பட்டுவிட்டுப் போகிறது, ஆட்டமும் முடிகிறது.