பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19


குஷ்டரோகியைத் தன் மனம் கவர்ந்த மன்மதன் என்று எண்ணிய அந்த மங்கை, தழுவினாள். தாகம் தீர்த்துக் கொண்டாள். பிறகு தான் தெரிந்தது அவள் பரபுருஷன் என்று. கொடுமையான நோய் கொண்ட குஷ்டரோகி என்று. சோரம் போனோமே என்று மனம் வெதும்பிய அந்த இளவரசி அங்கேயே தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.

பெண்ணழகியாக ஊர்ச்சாவடிக்குள் நுழைந்த அந்த இளவரசி, பேயாக மாறி அங்கேயே சுற்றத் தொடங்கி விட்டாள். அருந்தமிழ்ப் பாட்டி ஒளவை, அங்கு வந்தவுடன் தான் அவள் பேயுருவம்மாறி பிறவியின் பாவம் தீர்ந்து பெருமைப் பெற்றாள் என்பது ஒரு கதை.

பந்து விளையாடிய பெண்ணுக்கு பாபம் வந்தது என்று தானே நினைக்கிறீர்கள் ? சாபமும் வந்தது என்றால் எப்படி இருக்கும் மனது ?

தேவலோகத்தில், தெய்வமாது ஒருத்தி, தீராத இன்ப உணர்வுடன் பந்தாடிக் களித்தக் காட்சியைப் பார்த்துப் பொறுக்காத ஒரு வித்யாதரன் என்பவன், வானவெளியில் பறந்து மகிழும் ஒருவன், பந்தை உதைத்துவிட்டுப் போய் விடுகிறான். உதைபட்டு ஓடிய பந்தைத் தேடிக் களைத்த அந்த ஆரணங்கு அழுதே சோம்பிவிட்டாள். பெண்ணழகி வடிக்கும் கண்ணீர் கண்டு உலகம் பொறுக்குமோ என்னமோ, இந்திரனுக்கு பொறுக்குமோ ? பொறுக்கவில்லை.

அழுகின்ற அழுகியைப் பார்த்து ஆறுதல் கூறிவிட்டு, 'வந்தால் பந்துடனே வருவேன், இல்லையேல் ? என்று வீர சபதம் எடுத்துக்கொண்டு, பந்து போன திசையுணர்ந்து பாய்ந்து போகிறான் இந்திரன். வெள்ளிமலை குறுக்கிடுகிறது. விழித்து நோக்குகிறன். அங்கே மாறுவேடம் அணிந்து சிவனும் பார்வதியும் சூதாடுபவர் போல உட்கார்ந்து