பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்

16



1698ஆம் ஆண்டில் ஒரு நாள் ரஷ்ய நாட்டை ஆண்ட மகாபீட்டர் என்னும் மாமன்னன், ராஜதந்திர உறவின் நிமித்தம் இங்கிலாந்து நாட்டிற்குச் சென்றிருந்தான். மன்னன் போனால் தனியாகவா போவான்! அவன் கூட' ஆள், அம்பு, அணிவகுப்பும்' சென்றது. நாட்டில் ராஜதந்திர பேச்சு வார்த்தைகள் நடத்திவந்த சமயத்தில், ஒரு முறை இங்கிலாந்து நாட்டில் லண்டன் மாநகருக்கும் செல்ல நேர்ந்தது.

அப்பொழுது லண்டனில் மிகவும் புகழ்பெற்ற ஆட்டமாக இருந்த குத்துச்சண்டைப் போட்டியைக் காணும் வாய்ப்பும் மன்னனுக்குக் கிட்டியது. குத்துச் சண்டையின் வேகத்திலும் விவேகத்திலும் மன்னனின் மனம் லயித்துப்போய் விட்டது. போட்டியை மிகவும் ரசித்தான்.

போட்டி முடிந்து தன் இருப்பிடம் வந்து சேர்ந்த பிறகும். அந்தக் குத்துச்சண்டைப் போட்டியைப் பற்றிய நினைவு மனதில் ரீங்காரமிட்டதே ஒழிய, மன்னன் நினைவைவிட்டு மறைந்துபோய்விடவில்லை. மாறாக வளர்ந்துகொண்டே வந்தது.

உடனே தனது மெய்க்காப்பாளர்களையும், மற்றவர்களையும் அழைத்தான் மன்னன், தான் பார்த்த குத்துச்சண்டை போட்டியை விளக்கினான். 'உங்களில் யாராவது ஒருவன் இங்கே உள்ள குத்துச்சண்டைக்காரருடன் போட்டியிட்டு, உங்கள் திறமையை, வலிமையைக் காட்டமுடியுமா' என்று கேட்டான்.

மன்னன் தன் மனம் திறந்து ஆசையைப் பேசிவிட்டான். இங்கிலாந்து நாட்டு வீரனுக்கு ரஷ்ய நாட்டு வீரன் எளிதானவன் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டவேண்டும் என்ற எண்ணம் மன்னனுக்கு இருந்ததுபோலும்.