பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்

22


தாமஸ் ஒய்ட் வைத்திருந்த பந்தாடும் மட்டையின் அகலமும் விக்கெட்டின் அகலமும் சரியாக இருந்தது. அவர் அந்த மட்டையை வைத்துக்கொண்டு நின்றுவிட்டால், விக்கெட்டையே மறைத்துவிடும். அதனால், அவரை ஆட்டமிழக்கச் செய்யவே முடியாது. அவ்வளவு அகலமானதாக இருந்தது அந்த மட்டை.

செர்டிசி குழுவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். கூச்சல் போட்டனர். குழப்பம் அதிகமாகியது. அவர்களிலே ஒருவர் தாமஸ் ஒய்ட் வைத்திருந்த மட்டையை வாங்கினார். அவர் கையில் ஒருவர் சிறு பேனாகத்தியைத் திணித்தார். உடனே மட்டையைச் சீவும் பணி தொடங்கியது.

கோபம் கொப்புளித்துக்கொண்டு வந்தாலும், ஒன்றும் செய்யமுடியாமல் தாமஸ் ஒயிட்டால் வேடிக்கைப் பார்க்கத்தான் முடிந்தது. இப்படி குழப்பத்தில் தொடங்கி கூச்சலில் எழும்பி, பிறகு ஆட்டக்காரர்களுக்கிடையே அமைதியான சமாதானப் பேச்சு தொடர ஆரம்பித்தது. பிறகு, ஒரு முடிவும் பிறந்தது.

அதாவது, பந்தாடும் மட்டையின் அகலம் இஷ்டப் பட்டவர்களுக்கு ஏற்ப இஷ்டப்பட்ட அகலத்தில் இனிமேல் இருக்கக்கூடாது என்று ஒரு வரம்பினைக் கொண்டு வந்தனர். மட்டையின் அகலம் நாலேகால் அங்குலத்திற்குமேல் போகவே கூடாது என்றும் விதியமைத்தனர். அதுவே இன்னும் அப்படியே மாறாமல் இருக்கிறது.

அடங்காத ஆட்டக்காரர் தாமஸ் ஒய்ட் கொண்ட விபரீத ஆசை, இன்றும் தொடர்ந்து வருகிற ஒரு விதி அமையக் காரணமாக இருந்ததே! அவரை நாம் பாராட்டலாம். எதிராட்டக்காரருக்குத் தீமையாக இருந்தது. எல்லோருக்கும் நன்மையாக முடிந்ததே. இதைத்தான் தீமையிலும் நன்மை என்று பெரியோர்கள் கூறுகின்றார்களோ என்னவோ!