பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

143

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்


வெற்றிபெற்ற வீராங்கனைக்கு ஆலிவ் மலர் வளையம் உண்டு. ஆண்களுக்குரிய பரிசு போல்தான். ஆனால், அதற்கடுத்து, அற்புதமான விருந்தும் உண்டு. அதாவது, ஹீரா தெய்வத்திற்குப் பலியிட்ட காளை மாட்டின் கறித்துண்டும் கிடைக்கும். வெற்றி பெற்றவர்கள், தங்களைப் புகழ்கின்ற சிறப்புக் குறிப்புக்களுடன் சிலை எழுப்பிக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டார்கள்.

இத்தகைய சிறப்புடன் ஒலிம்பிக் பந்தயங்கள் கிரேக்க நாட்டில் நடத்தப்பெற்றன. வலிமையான தேகத்தைப் பெற்று, வாழ்வாங்கு வாழ்ந்த அவர்கள், வரலாற்றில் வானளாவிய புகழுடன் வாழ்கின்றனர்.

தங்கள் தேகத்தில் திறமும் திறனும் நிறைந்திருந்த நாட்களின் தேனினுமினிமையாக, அவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. அவர்களிடையே திறம் குறைய ஆரம்பித்ததும், வாழ்க்கைத் தரமும் குறையத் தொடங்கியது. ரோமானியர்களிடம் தோற்றனர். அவர்கள் கட்டிக் காத்த ஒலிம்பிக் பந்தயம் காற்றிலடிபட்ட பட்டமாகத் துடித்தது. கடைசியில் நூலறுந்த பட்டமாகியது. இறுதியில் தேய்ந்தே அழிந்தது. அதைத்தான் கிப்னிஸ் என்ற வரலாற்றாசிரியர் கூறுகிறார்.

அநேக நாடுகள் எவ்விதச்சுவடும் இல்லாமல் அழிந்தே போயின. காலமெல்லாம் வரலாறு வடித்துக் காட்டுகின்ற உண்மையாகவே நம்மிடையே உலவுகின்றன. அவ்வாறு நாடுகள் எல்லாம் அழிந்து போனதற்குரிய காரணம் என்ன வென்றால் - அது மிகவும் சாதாரண காரணம் தான். அவர்களும், அந்த நாடும் அழியக் காரணம் மக்கள் தங்கள் உடல் திறனை (Physical Fitness) இழந்ததினால்தான் வீழ்ந்தார்கள் என்பதே.