பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கவுன்சிலின் நிர்வாகக் குழு கலந்தாலோசித்து, அதிகாரிகள் தோற்றவனுக்கு நஷ்டஈடு தரவேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதே சமயத்தில் முதலில் வந்தவன் என்று தீர்மானிக்கப்பட்ட முடிவு மாற்றப் படவில்லை. அதிகாரிகள் நஷ்ட ஈடு கட்டுகின்ற நிலைமையில் நிறுத்தப்பட்டதால், நிம்மதியில்லாமலே அந்த நீதிபதி வேலையை செய்து கொண்டிருந்தனர் என்று வரலாறு கூறுகின்றது.

போட்டிகள் எல்லாம் முடிந்தவரை விடியற்காலையிலேயே நடத்தினார்கள். காரணம் என்னவென்றால், சூரிய வெப்பம் தாக்காத குளுமை வேளை நன்றாக ஓடத் தாண்ட என்ற அளவில், அதிக சுறுசுறுப்பை உண்டாக்கும் என்பதால் தான்.

ஒரு பந்தயம் நடந்து மறுபந்தயம் நடக்கின்ற இடைவெளிக்குள், பந்தயத்திடல் முழுவதும் புல் புதராக மண்டிவிடும். இந்தப்புல் அகற்றிப் பிடுங்கும் பணியை, போட்டியில் பங்கு பெறும் உடலாளர்கள்தான் செய்திருக்கின்றார்கள். அவர்கள் புல் பிடுங்கி தரையை செதுக்கி வேலை செய்வதைப் பார்த்து வேறு அடிமைகள் இல்லையா இதனைச் செய்ய, என்று மற்றவர்கள் கேட்கின்ற நிலையில், போட்டியிடுபவர்கள் பொறுமையாக வேலை செய்திருக்கின்றார்கள்.

விளையாட்டுப் போட்டிகளை எல்லாம், பெரும் பணக்காரர்கள் மனமுவந்து அளித்த பெருங்கொடையினால் தான் நடத்தப்பட்டிருக்கின்றன. போட்டியாளர்கள் தங்கள் மேனியில் தேய்த்துக் கொள்ள ஆலிவ் எண்ணெய் தருவதிலிருந்து மற்றும் அத்யாவசியமான பொருட்களை அளிப்பது வரை பணக்காரர்கள் கொடையே பரிணமிக்கச் செய்திருக்கின்றன. செல்வந்தர்களின் செம்மாந்த வள்ளல் தன்மை தான், நாட்டின் சிறப்பையே வானளாவ உயர்த்தியிருக்கின்றன.