பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

காளிதாசன் உவமைகள்


காட்டில் கோடையால் நிலம் வெந்து பிளந்திருக்கிறது. அதில், முதல் மழைத்துளிகள் வீழ்தலால் மண்ணின் மணத்துடன் கூடிய ஆவி எழும்புகிறது. அவ் ஆவி செங்காந்தள் முகையின் மேல்படுகிறது. பூ விரிகிறது.


இராமன் இக்காட்சியைச் சீதைக்குக் காட்டித் தம் திரு மணத்தின் போது நிகழ்ந்ததை நினைவூட்டுகிறான். ர. 13.25


ட்புலன் ஒன்றே எனினும் ஒளியில் பொருள்களைக் காணும் கண் இருளில் காண்பதில்லை. இருளில் பொருள்களைக் காண கட்புலன் மட்டும் போதாது; விளக்கின் ஒளியும் வேண்டும். ஒருவன் இடையூறுகள் நீங்கிப் பயன் பெறுவதற்கு வேண்டிய கருவிகள் இருந்தாலும் துணையும் வேண்டும். நல்ல துணையைக் கொண்டே ஒருவன் இடையூறுகளைக் களைந்து தன் குறிக்கோளை அடைய முடியும். மா.1:19


முகிலே அளகாபுரிப் பெண்கள் மின்னல் போன்ற உருவம் உடையவர்; வானவில் போன்ற அழகிய வண்ண ஆடைகளை அணிபவர்; அங்குச் சித்திரங்கள் நிறைந்த அரங்குகளில் முழங்கும் இடிபோன்ற முரசம் பாடலுக்கும் ஆடலுக்கும் இசைய அதிரும்; நீர் நிறைந்தவாவிகளும், விண்மீன்கள் போன்ற மணிகள் குவிந்து வானைத் தொடும் உயர்ந்த மாளிகைகளும் அங்கு உள; உனக்குப் பழக்கமான சூழ்நிலை அவ்விடத்தும் உண்டு; புதிதாக ஓரிடத்திற்குப் போகிறோம் என்ற எண்ணமே உனக்கு உண்டாகாது. மே. 2:1


கொண்டல் தென் நாட்டைக் கடந்து பனிமலையில் ஏறு கிறது; அங்கு மலைத்தொடரிலிருந்து தெளிந்த நீருடன் கங்கை இறங்குகிறது. ஏறும் கரு முகில் இறங்கும் நீருள் படிவது கரிய யானை ஆற்றுக்கு எதிரே தன் உடலின் பிற் பகுதியை நீட்டிப் படுத்துக் குளிப்பது போன்ற தோற்றத்தை அளிக்கிறது.


முகிலின் கருநிழல் கங்கையின் வெண்ணீரில் சற்றுத் தொடர்ந்து செல்வது யமுனையும் கங்கையும் வேறு இடத்தில் ஒன்று கூடுகின்றனவோ என வியக்கத் தகும் காட்சியை நினைவுக்குக் கொண்டு வருகிறது. மே. 1:51