பக்கம்:வாழும் வழி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

87


கண்டுகொள்ளலாம் என்றாலும், அந்த மருத்துவ அறிஞர் நீண்ட நாட்களாகச் சென்னையில் தங்கிவிட்டதால் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், உரையாடலின் ஊடே ஓடிவந்த ஒரு சொல் அவரது மாவட்டத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டது; அவர் ‘பொறவு’ என்னும் ஒரு சொல்லை இடையே கையாண்டார். பிறகு - அப்புறம் என்னும் பொருளில் ‘பொறவு’ என்னும் சொல்லை நெல்லை மாவட்டத்தினர் சொல்கின்றனர். இதே பொருளில் ‘அப்பால’ என்னும் சொல்லைச் சென்னைப் பக்கத்தில் உள்ளவர் சிலர் சொல்லுகின்றனர். ‘பொற வென்ன’ (பிறகு என்ன) என்னும் சொல்லாட்சியை நெல்லை வட்டத்தினரிடம் மிகுதியும் காணலாம். என்னாங்க - என்னையா என்பது போன்ற பொருளில் ‘என்னவே’ என்னும் சொல்லாட்சியையும் இவர்களிடம் காணலாம்.

‘இந்த போடு போடுகிறான்’ - ‘நான் சொல்லிப் போட்டேன்’ - ‘இத்தசோடு பெரிசு’ முதலான ஆட்சிகள் கொங்கு நாட்டாருடையவை. மெதுவாக என்னும் பொருளில் 'பைய-பைய’ என்பதும் வாலப்பலமும் கோலிக்குஞ்சியும் பாண்டிய நாட்டாரது ஆட்சி. வந்துகொண்டு போய்க்கொண்டு என்னும் பொருளில் ‘வந்துகினு - போய்க்கினு’ என்பது தென்னார்க்காடு மாவட்டத்து ஆட்சி. இதே பொருளில் ‘வந்துகிட்டு - போய்க்கிட்டு’ என்பது சோழ நாட்டாருடையது. இடம் என்னும் பொருளில் ‘தாவு’ என்று சொல்வது தொண்டை நாட்டு ஆட்சி. வழி என்னும் பொருளில் ‘தடம்’ என்று சொல்வது பாண்டியநாட்டு ஆட்சி. நமது தமிழ் - நமது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/89&oldid=1108215" இலிருந்து மீள்விக்கப்பட்டது