பக்கம்:வாழும் வழி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

119


‘பட்டைக்குள்ளே பூத்து, பிறகு காயாக வெளிப்படும் என்றோ அல்லது அது பூப்பதும் தெரியாது காய்ப்பதும் தெரியாது; பூத்த மறுவிநாடியே காய்த்துவிடுவதால் யார் கண்ணுக்கும் புலப்படாது’ என்றோ திறமையான பதில் வரும். அல்லது, ‘அத்தி பூக்காமலேயே ஒரேயடியாகக் காயாகவே காய்த்துவிடும்’ என்றும் ஒரு குரல் பேசும். ‘இல்லையில்லை - அத்திமரத்தின் பூக்கள் உண்டு அவை பூத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன்’ என்று அடித்துப் பேசுகிற அண்டப் புளுகு ஆகாயப் புளுகுகளும் உண்டு.

மற்ற பூக்களைப் போல அத்திப்பூ என ஒன்று தனியாக இருக்குமானால், அது பூப்பதும் உண்மையானால், மேற்கூறிய பேச்சுகளுக்கே இடமில்லை; ‘அத்திபூத்தாற் போல’ என்ற பழமொழியும் தோன்றி யிருக்க முடியாது. எனவே, இதில் ஆராய்ந்து காண வேண்டிய மறைபொருள் ஏதோ ஒன்றுள்ளது.

அத்தி மரத்தை நன்கு அறிந்து வைத்துள்ள நம் மக்கள், அத்திப் பிஞ்சு இதற்கு நல்லது - அத்திக்காய் அதற்கு ஏற்றது. அத்திப்பழம் இதற்கு உகந்தது அத்திப்பால் அதற்குச்சிறந்தது - என்றெல்லாம் அத்தியைப் பற்றி மருத்துவமுறையில் நன்கு ஆராய்ந்து அறிந்து வைத்துள்ள நம் மக்கள், அத்திப் பிஞ்சினையும் காயினையும் கூட்டு செய்தும் குழம்புவைத்தும் பொரியல் பண்ணியும் வற்றல் போட்டு வறுவல் செய்தும் உண்டு பழகிய நம் மக்கள் அத்திப்பூவைப் பற்றிய வரலாற்றை மட்டும் அறியாதிருப்பது வியப்பாயுள்ளது. அந்த அரிய வரலாற்றினை நாம் ஈண்டு காண்போமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/121&oldid=1111808" இலிருந்து மீள்விக்கப்பட்டது