பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காளிதாசன் உவமைகள்

19


காதலியின் கருங் கூந்தல் காதலனுடைய உயர்ந்த தோளிலும், பரந்த மார்பிலும், பரவுகிறது. கூந்தலில் முத்துச்சரங்கள் பின்னப்பட்டுள்ளன. அவற்றினின்று வெண் முத்துகள் சிதறுகின்றன.

மேகம் விரும்பியவாறு மனைகளில் நுழைந்து திரிகிறது.

காதலி, இன்ப மயக்கத்தில் நாணத்தைத் துறந்து, காதலனை விருப்பம் போலத் துய்க்கிறாள். மே. 1.63

மிதிலை நகர் அத்தகைய காதலி, நாற்புறமும் உத்தியான வனங்களை உடையவள். அவற்றில் தளிர்களும் கொடிகளும் பூக்களும் குலுங்குகின்றன.இராமனது கடிமணத்துக்குப் பெரும் சேனையுடன் தசரதன் வந்தான். சேனையில் உள்ள யானைகளும், தேர்களும், குதிரைகளும், வீரர்களும் தம் அளவு கடந்த அன்பால் உத்தியான வனங்களையும் அவற்றில் உள்ள மரம், தளிர், கொடி, மலர்களையும் இறுகத் தழுவினர். அவற்றின் இளமைப் பொலிவு குலைந்தது. ஆனால், மிதிலை நங்கை இவ் ஆலிங்கனத்தை விரும்பி வரவேற்றாள். தன் எழில் நலக்குலைவை அவள் அறியவே இல்லை. ஆலிங்கனத்தால் உண்டான இன்பத்தில் திளைத்திருந்தாள். ர.11:52

புதிதாக மணமான இளம் பெண் அவள். கணவன் அகன்ற மார்பும் உடல்திண்மையும் உடையவன். இன்பச் சூழ்நிலை, இன்சொல், அன்பு, ஆர்வம், நாகரிக நடைமுறைகளால் அவன் அவள் மனத்தையும் உடலையும் கனிவாக்கி, அவளுக்குத் தன்மீது ஆசையை எழுப்பி, அவளைத்தான் அநுபவிப்பது போலவே அவளும் தன்னை அநுபவிக்கச்செய்து, ஒத்த இன்பம் நுகர்வது முறையன்றோ? அன்றேல், இல்வாழ்க்கை வெறுப்பிலும் அருவருப்பிலும் முடியலாம். இதை உணர்ந்தவன் அஜன். சா. 8:17

சகுந்தலை அரசவைக்கு ஆர்வத்துடன் வந்து, தான் துஷ்யந்தனுடைய மனைவி என்று அறிவித்தும், துஷ்யந்தன் அவளை ஏற்க மறுக்கிறான். அவள் கருவுற்றுள்ளதை அறிந்தும், அவள்மீது இரக்கம் கொள்ளவில்லை. பல ஆண்டுகளுக்குப்பின் உண்மையை அறிந்த அரசன் தன் கொடுஞ் செயலுக்குக் கழி