பக்கம்:வாழும் வழி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

வாழும் வழி


சிறப்புப் பெயரே இக்காலத்து வழங்கப்படுகின்றது. இப்போது திருமந்திரம் என்றால்தான் யாருக்கும் தெரியும். மூவாயிரம் தமிழ் என்றால் யாருக்கும் தெரியாது. இதுபோலவே, மாணிக்கவாசகர் இட்ட சிவபுராணம் என்னும் பெயர் மறைக்கப்பட, திருவாசகம் என்னும் பெயரே வழக்காற்றில் உள்ளது. மேலும் திருமூலர்,

“காலை எழுந்து கருத்தறிந்து ஓதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவ ரன்றே”

என்று நூற்பயனும் கூறியுள்ளார். அதாவது, மூவாயிரம் தமிழ் என்னும் திருமந்திர நூலைக் காலையில் எழுந்து பொருளுணர்ந்து கற்பவர்கள் உலகத் தலைவனாகிய இறைவனை அடைவர் என்றும் கூறியுள்ளார். இதுபோலவே மாணிக்கவாசகரும்,

“சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தினுள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து”

என்று நூற்பயன் கூறியுள்ளார். இப்படியிருக்கும்போது, திருவாசகத்தின் முற்பகுதியை முன்னுரை என்று சொல்லாமல், ஒரு தனிப்பகுதி என்று எவ்வாறு சொல்ல முடியும்? சிவபுராணம் என்பது முழுநூலுக்கும் பெயராகும் என்று சொல்லாமல், முன்னால் உள்ள ஒரு தனிப்பகுதியின் பெயர் என்று எப்படிச் சொல்லலாம்?

இன்னும் வளர்த்துவானேன்? திருமந்திரம் எழுதிய திருமூலரைப் போலவே, இராமாயணம் எழுதிய கம்பரும் பெரிய புராணம் இயற்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/72&oldid=1107078" இலிருந்து மீள்விக்கப்பட்டது