பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21


ஏளனமான நிலைக்கு ஏன் இடம் கொடுக்க வேண்டும்? ஏழைகள் எப்படியாவது பிழைக்கட்டும் என்ற இரக்கமா? அங்ஙனமெனில், எந்தத் தீமையை வேண்டுமானாலும் செய்யலாமா? உலகில் நன்மைகளோ - தீமைகளோ, கடவுள் விருப்பப்படிதான் நடைபெறுகின்றனவா? உயிர்களின் இந்த நிலைமை பொருத்தம்தானா?

தம் குழந்தைகள் துன்பப்படப் பெற்றோர் உடன் படுவரா? கடவுளுக்கு ஏன் இது தெரியவில்லை. குறைபாடுடைய குழந்தைகளை-உயிரிகளைக் கடவுள் படைப்பதேன்? மக்கள் குறைபாடுடைய குழந்தைகளைப் பெற்றுவிட்டாலும் குறைபோக்க முயல்கின்றனர்—கெட்ட பிள்ளைகளைத் திருத்த முயல்கின்றனர். கடவுள் இதுபோல் ஏதாவது செய்கிறாரா? நரகத்தில் அல்லவா தள்ளுகிறார்! பெற்றோரின் அன்பைப் பெறபெற்றோரிடமிருந்து உதவி பெறப் பிள்ளைகள் கெஞ்ச வேண்டியதில்லையே. இயற்கையாகவே பெற்றோர்கள் அருள் மழை பொழிகின்றனரே! ஆனால் கடவுளின் அன்பை-அருளைப் பெற, மக்கள் எவ்வளவோ பணச் செலவு செய்யவேண்டியுள்ளது-எவ்வளவோ உடல் உழைப்பு மேற்கொள்ள வேண்டியுள்ளது-கீழே விழுந்தும், மண்டியிட்டும், கைகட்டியும் அல்லது கைகூப்பியும், தலை தாழ்த்தியும், வாயால் புலம்பியும் வாழ்த்தியும் கெஞ்சிக் குழைந்து கூத்தாட வேண்டியுள்ளது. இஃது ஏன்? தாயின் அன்பைப் பெறச் சேய் தாய்க்குக் கையூட்டு (இலஞ்சம்) கொடுப்பதில்லையே! கடவுள் அன்பைப் பெறுவதற்கு மட்டும் மக்கள் ஏன் இவ்வளவு செய்ய வேண்டியுள்ளது? அங்ஙனமெனில், கடவுள் கொடியவரா? இரக்கம் இல்லாதவரா? மக்களுக்கு இருக்கும். இரக்கம் கடவுளுக்கு இல்லையே. ஏன்?

கட-2