பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


8. மனத்தின் தோற்றம்


உயிரின் தோற்றம் போலவே, மனத்தின் தோற்றமும் ஆராயத்தக்கது. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என நான்கு உட்கருவிகள் (அந்தக் கரணங்கள் - Inner seat of thought, feeling and volition, consisting of four aspects) இருப்பதாக இந்தியத் தத்துவவாதிகள் சிலர் கூறுகின்றனர். மனம் என்பது நெஞ்சில் (கழுத்தில்) இருப்பதாக அப்பாவிகள் சிலரும், மனம் என்பது இதயத்தில் இருப்பதாக வேறு சிலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.


ஆன்மாவே மனம் என்பது சிலரது கருத்து. மனம் ஒரு தனிப்பொருள்; அது மூளையில் தங்கியிருக்கிறது என்பர் சிலர். உடலிலேயே ஏற்படும் ஒருவகை உணர்ச்சியே மனம் என்பது ஒரு சாரார் கருத்து. மனம் ஓர் அணு என்பர் சிலர். அடிக்கடி மாறுதல், இன்ப துன்பங்களை உணர்தல் முதலிய செயல்களை நோக்குங்கால், உடலினின்றும் வேறாக மனம் என ஒன்று இருப்பது தெளிவு என்பது இன்னொரு சாரார் கூறுவது. உடல் இயக்கச் செயல்பாடுகளைக் கொண்டு, மனம் என்னும் ஓர் ஆற்றல் இருப்பது புலனாகிறது எனப் பரிணாமக் கொள்கையினர் கூறுகின்றனர். இனி, இக்