பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61


றார் எனில், இப்போது இப்பூவுலகில் உள்ள சுமார் ஐந்நூறுகோடி மக்கள் உயிர்களும் ஆயிரம்-ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் எங்கே இருந்தன? கடவுள் அவற்றை எங்கே வைத்திருந்தார்? ஒரு காலத்தில் நூறு கோடி மக்களே இருந்தனர்; பிறகு பிறகே நாளடைவில் மக்கள் இனம் பெருகிற்று- பெருகுகிறது- இப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மக்கள் முயல்கின்றனர்- படிப்படியாக வெற்றியும் காண்கின்றனர். இந்திய நாட்டுக் கவியாகிய சுப்பிரமணிய பாரதியார் (1882-1921) இற்றைக்குச் சுமார் அறுபத்தேழு ஆண்டுகட்கு முன்பு இந்தியாவில் முப்பது கோடி மக்கள் இருந்ததாகக் கணக்கு வைத்து, ‘முப்பது கோடி முகம் உடையாள்’ என இந்தியாவாகிய தாயைப் பாடினார். இப்போது இந்தியாவின் மக்கள் தொகை எழுபது கோடியைத் தாண்டியுள்ளது. ஆனால், மக்கள் தொகைப் பெருக்கத் தின் விழுக்காடு இப்போது குறைக்கப்பட்டு வருகிறது: இவ்வாறு வேறு பல நாடுகளையும் கொள்ளலாம்.


இச்செய்தியை உற்றுநோக்குங்கால், மக்கள் தொகையைப் பெருக்குவதோ அல்லது சுருக்குவதோ மக்கள் கையிலேயே உள்ளதே தவிர, கடவுள் கையில் ஒன்றும் இல்லை என்பது புலப்படும். இந்த ஆற்றல் கடவுள் கையில் இருக்குமானால், எல்லா உயிர்களையும் ஒரே சமயத்தில் அவிழ்த்துக் கொட்டியிருக்கலாமே! கொஞ்சங் கொஞ்சமாக அனுப்புவதின் நோக்கம் என்ன? மற்றும், நிலாவுலகில் சில கோடிகளைத் தள்ளி விட்டிருக்கலாமே! அங்கே உயிர்க்காற்று, தண்ணீர், உணவுப் பொருள் முதலானவற்றை ஏன் உண்டாக்கவில்லை? எனவே, இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்குங்கால், கடவுள் என ஒருவர் இருந்து கொண்டு ஒன்றும் செய்யவில்லை; எல்லாமே, இனம் கண்டு