பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31


ஆற்றல் பெற்ற கொடியவர்கள்-தீயவர்கள், எளிய மக்களை ஏய்த்துக் கொடுமைப்படுத்தி மேலுக்கு வந்து விடுகின்றனர். இவர்களை யாராலும் ஒறுக்க முடியவில்லை; இவர்களை ஒறுக்க முயல்பவர்கள் இவர்களால் மீண்டும் ஒறுக்கப்படுகின்றனர்.


நல்லவர்கள் இயற்கையாகச் சிலவகை ஆற்றல்களைப் பெறாமையால், வாழ்க்கைச் சிக்கல்களையும் போட்டிகளையும் வென்று மேல்நிலைக்கு வரமுடியவில்லை. இவ்விரு திறத்தாரின் வாழ்க்கை நிலையைக் காண்பவர்கள், தீயவர் மேல் நிலையிலும் நல்லவர் கீழ் நிலையிலும் இருப்பதற்குக் காரணம் முற்பிறவியில் செய்த ஊழ்வினையேயாகும் என்ற முடிவுக்கு எளிதில் வந்துவிடுகின்றனர். மற்றும்-சாதி வேற்றுமைக் கொடுமைகள் உலகில் முதல் முதல் மக்கள் தோன்றிய தொடக்கக் காலத்தில் இல்லை. இவை இடையில் புகுந்தனவாகும்-புகுத்தப்பட்டனவாகும். மேல் சாதிக்காரராக ஆக்கப்பட்டவர்கள் மேல்நிலையில் நிமிர்ந்து நின்று பல நல்ல வசதி வாய்ப்புகளைப் பெற்று இன்பமாய் வாழ்கின்றனர்; அதே நேரத்தில், கீழ்ச்சாதிக்கார ராக ஆக்கப்பட்டவர்கள் கீழ்நிலையில் தாழ்ந்து குனிந்து நல்ல வசதி வாய்ப்புகள் கிடைக்கப்பெறாமல் துன்பத்தில் தோய்ந்து உழல்கின்றனர். இதற்கும் ஊழ்வினையே காரணமாகக் கற்பனை செய்யப்படுகிறது. ஒரு சாதியினர்க்குள்ளேயே-ஒரு தரத்தினர்க்குள்ளேயே ஒரு சிலர் ஏழையராகவும் வேறு சிலர் செல்வராகவும் இருக்கும் அமைப்பை எடுத்துக்கொள்ளினும் இதே நிலை தான். இவ்வாறு இன்னும் பல அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றிற்கெல்லாம் சமுதாய அமைப்பின் சீர்கேடே காரணமாகும்; ஊழ்வினை என ஒன்று காரணமாகாது. முயன்றால் இத்தகைய சீர்கேடுகளை அகற்றிச் சமுதாய அமைப்பைச் செப்பம் செய்ய முடி