பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

117


“என்ன அநியாயம்? சின்னம்மாவுக்கு மூவாயிரம் தேறாதுன்னு வித்திங்க. எழுதி வாங்கிட்டீங்க. இப்ப எனக்கு ஒண்ணுமே உரிமையில்லைன்னு சொல்றீங்க? ஏங்க, கேட்டுட்டுச் சும்மா உக்காந்திருக்கிறீங்க?”

குரல் கக்கலும் கரைசலுமாகப் பீரி வருகிறது.

“இத பாரு செவந்தி, நீ எதுக்கு முந்திரிக் கொட்டை போலத் தலையிடுற? எனக்கு என்ன செய்யணும்னு தெரியும். நீ பேசாம இரு.”

“அந்தப் பூமில என்னத்த வெளயும்? ஏரில தண்ணி இல்லை. ஒரு பக்கம் அரசியல்வாதிகளின் ஆளுங்க குட்ச போட்டுட்டு உட்கார்ந்திருக்காங்க. நம்ம நிலத்திலும் ஒண்ணும் பண்ண முடியாதபடி எவங்கிட்டன்னாலும் பத்துப் பத்துன்னு பணம் வாங்கிட்டு முப்பது பேரைக் கொண்டாந்து வைப்பானுவ. இப்படித்தான் மட்ராஸ் பூர நடக்குது. பேசாம மில்லுகாரர் வாங்கிக்கிறார்னா குடுத்திட்டு ரொக்கம் வாங்க. வூட்ட நல்லபடியாக் கட்டலாம். இல்லாட்டி என் கடைய ஆட்டோ ஷாப்பாக்க வசதியாக இருக்கும்...”

“அதெல்லாமில்ல. எனக்கு லோன் வாங்கித் தருவீங்க. நா மணிலாக் கொட்டைப் பயிர் வைப்பேன்...”

“இத பாரு செவந்தி, நீ வீண் கனவு காணாத, லோன்லாம் எடுக்க நா வரமாட்டே...”

‘நான் பயிர் பண்ணுவே பாருங்க!’ மனசுக்குள் சபதம் செய்து கொள்கிறாள் செவந்தி.


13


சாந்தி காலனி வீட்டின் பெரிய முற்றத்தில் நெல் புழுக்கி உலர்த்தியிருக்கிறாள். தாழ்ந்த கூரையின் குட்டித் திண்ணையில் பிள்ளைகள் பள்ளிக்குப் போகும் சீருடையில் இருக்கிறார்கள்.