இந்த நூலுக்குத் ’தமிழ் அங்காடி’ என்ற பெயர் வைத்ததற்குக் காரணம், நூலின் இறுதிக் கட்டுரை ’தமிழ் அங்காடி’ என்றிருப்பது மட்டும் அன்று. கடைத் தெருப் பகுதியாகிய அங்காடியில் நுழையின், பல்வேறு பகுதிகளைக் (Stalls) காணலாம். அதுபோல, இந்த நூலிலும் பல்வேறு பகுதிகளின் அறிமுகம் கிடைக்கும். அப்பகுதிகளாவன:-
அறிவியல் பகுதி, காப்பியப் பகுதி, கவிதைப் பகுதி, கதைப் பகுதி, வாழ்க்கை வரலாற்றுப் பகுதி, கைத்தொழில் பகுதி, கடவுளர் பகுதி, இலக்கணப் பகுதி, மொழிப் பகுதி, அறவுரைப் பகுதி, அங்காடிப் பகுதி என்பன அவை.
ஒரு கல்லால் இரண்டு மாங்காய் அடிப்பது போல, இந்த நூல் அமைப்பால், பல்வேறு செய்திகளைத் தெரிந்து கொள்வதல்லாமல், மாற்றுச் சுவைகளால் படிப்பதற்கு அலுப்புத் தட்டாமலும் இருக்கும்.
இந்த நூலுக்கு ஆதரவு நல்கும்படி அனைவரையும் பணிவுடன் வேண்டுகிறேன்.
நன்முறையில் இந்நூலை அச்சிட்டுத் தந்த சிதம்பரம் சபாநாயகம் அச்சகத்தாருக்கு மிக்க நன்றி செலுத்துகிறேன். வணக்கம்.