நன்கு விரித்துக்காட்டப்பெற்றும், அழகுடன் முழுமைபெற்றும் (fully developed and finished Character) விளங்குகிற பாத்திரம் சீதாவுடையது.
பின், சீதா பாக்கியசாலி தானே?
முடிவில் :
தன் முதற்காதலுக்கு வடிவம் ஈந்த தாரிணியையே ராகவன் இறுதியில் கைத்தலம் பற்றுகிறான். தாரிணியைத் தான் திருமணம் செய்துகொண்டே தீருவேன் என்றும், அவளுடைய முகலாவண்யத்துக்காக அவளிடம் தான் பிரியம் வைக்கவில்லையென்றும் சத்தியம் செய்ததுடன், சீதாவுக்குத் தாரிணி கொடுத்த வாக்குறுதியை மீறக்கூடாதென்றும், தன்னிடமும் அதே விஷயத்தை சீதா சொல்லியிருப்பதாகவும் வற்புறுத்தியபின், தாரிணி திருமதி ராகவன் ஆகிறாள்.
இந்த ஒரு நல்ல முடிவில், ராகவன் என்ற நவநாகரிக இளைஞனின் தியாகமனத்தை நமக்குக் காட்டி, அவனது குணச்சித்திரப் படைப்புக்கு ஒரு மெருகு கொடுக்க மதிப்பிற்குரிய பேராசிரியர் கல்கி அவர்கள் என்னதான் முயற்சி செய்திருந்தாலும், அம்முடிவு ராகவனை முழுமைச் சித்திரமாக ஆக்கியதாகச் சொல்லவே முடியாது!
ராகவனின் இம்முடிவு செயற்கையாக (artificial) செருகப்பட்டதுபோல் அமைந்துவிட்டது!
பேரறிவாளன் யார்?
மனிதர்களைச் சிற்றறிவினர் என்றும் கடவுளைப் பேரறிவாளன் என்றும் நம் நாட்டுப் பெரியோர்கள் கண்டுணர்ந்து கூறுகிறார்கள்.