332 ✲ உத்தரகாண்டம்
பேரில, ஒரே குப்பை கூள மக்களாச் சிதறவிட்டிருக்காது... இப்ப எனக்கெல்லாம் இந்தப் பராம்பரியம் பற்றி, உணர்வு பூர்வமா ஒண்ணுமே தெரியாது. ஆனா, நான் ஒம்பது வருசமா வெளிநாட்டில இருக்கிறேன். அப்பப்ப வருவேன். அப்பாகூட ஒருவாரம், அங்கே இங்கேன்னு வரப்பதான் பிரச்னைகள் புரியிது. காவேரி, வாய்க்கால், கோயில், நம் கொள்கைகள், மனிதநேய உறவுகள் எல்லாம் சிதைந்து போன பிறகுதான் அருமையாகத் தெரியிது...”
“சிதையாது... கொண்டு வருவோம்... மீட்போம்” என்ற தொனியில் சூஜி-கையை உயர்த்திக் காட்டுகிறாள்.
“எதை, சாதி, மதம், தீண்டாமை, பெண் ஒடுக்கல், இதெல்லாமா? இவை யெல்லாமும் இங்கே இந்திய கலாசாரப் பண்பா இருந்திருக்கு, மறக்காதே!” சிரிப்பு, கூடவே கடுமையான முகங்கள்.
“அதாவது, பழையன சிலது கழித்து, புதியது புகுத்தி...”
இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்கையில், கன்னியம்மா, சிங்காரம், காலித், லீலா ஆகியோர் பின்புறம் நழுவி விட்டதைக் கவனிக்கவில்லை.
“தம்பி, நீங்க...” என்று தாயம்மா துவங்குமுன் அவன் அருகில் வந்து கைபற்றிக் கொள்கிறான். “என்னப் போயி நீங்க நாங்கன்னு? நா உங்க பேரன்...”
“சரி, சரி... ராசா... நீங்க..”
“இதானே, ராசாவும் வாணாம். நீங்க போன வாரம், அநு ஆன்டியப் பாத்தீங்களாம். உங்க வீட்ட எதோ மல்டிநேஷனல் நிறுவனத்துக்கு வுடறாங்க, மரத்த வெட்டினாங்கன்னு சொன்னீங்களாம்...”
“நீ வூட்டுக்குப் போனியாப்பா? குருகுலத்துல உங்க தாத்தா வாழ்ந்த காலம் நினைப்பு இருக்குன்ன. இப்ப பாத்தியா?"