பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

வேண்டிய ஆற்றலைப் பெற சர்க்கரையை ஆக்சிஜனேற்றம் செய்து கொள்கின்றன. இக்காரியங்களெல்லாம் செவ்வனே நடைபெற உறுதுணை செய்வது இன்சுலின் ஆகும். இன்சுலின் கணைய நீரோடு கலக்காமல் நேராக இரத்தத்தில் கலக்கிறது. நாம் அதிக அளவில் சர்க்கரையை உட்கொண்டால் கணையத்தில் அதிக அளவில் இன்சுலின் சுரக்கத் தொடங்கும். இன்சுலினைச் சுரக்கக் கூடிய சுரப்பிகள் பழுதடைந்தால் இன்சுலின் சுரப்பது குறையும். இவ்வாறு இன்சுலின் சுரப்பது குறைந்தாலோ அல்லது இன்சுலின் சுரக்காமலே போனாலோ இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதனால் திசுக்கள் சர்க்கரையைச் சக்தியாக மாற்றும் ஆற்றலை இழக்கும். இதனால் ஏற்படும் நோயே 'நீரிழிவு நோய்’. இதைச் ‘சர்க்கரை வியாதி” என்றும் கூறுவர்.

இந்நோய் கண்டவரின் இரத்தத்தில் மிகும் சர்க்கரை சக்தியாக மாறாமல் இரத்தத்தில் ஓடி சிறுநீர் மூலம் வெளியேறி விடும். எனவே இரத்தத்தில் மிகும் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்த முடியும். இதற்காக இந்நோய் கண்டவரின் சிறுநீரைச் சோதித்துப் பார்த்தும் இரத்தத்தைப் பரிசோதித்தும் சர்க்கரையின் அளவைக் கண்டறிய வேண்டும். அப்படி சர்க்கரை அளவுக்கதிகமாக இருப்பின் ஆடு, மாடு, பன்றி போன்றவற்றின் கணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட இன்சுலினை ஊசி மூலமோ அல்லது மாத்திரை வாயிலாகவோ உட்கொண்டு இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். வேறு சில நோய்களுக்கும் கூட இன்சுலின் மருந்தாகப் பயன்பட்டு வருகிறது.

நீரிழிவு நோய் கண்டவர்கள் அதிக அளவில் சிறுநீர் கழிப்பர். பலவீனமடைவர். அடிக்கடி மயக்கமும் ஏற்படும். சிலருக்குப் பைத்தியக்கோளாறுகள் ஏற்படுவதும் உண்டு.

இன்சுலினைக் கண்டுபிடித்தவர் எஃப்.ஜி. பாண்டிஸ் என்பவரும் சி. ஹெச். பேஸ்ட் என்பவருமாவார். இவர்கள் இருவரும் கனடா நாட்டு அறிவியல் ஆய்வாளர்களாவர்.

ஈ : நோய்களை விரைந்து பரப்பும் பூச்சியினங்களுள் ஈ முக்கியமானதாகும். ஈக்களில் பலவகைகள் உள்ளன. அவற்றுள் வீட்டு ஈ, மாட்டு ஈ, இறைச்சி மீது அமரும் நீல நிற ஈ, மிகச் சிறு கொசு போன்று கண்ணில் அமரும் கண் ஈ, பழங்களை நாடிவரும் ஈ என்பன குறிப்பிடத்தக்க ஈக்களாகும். ஈ பூச்சி இனத்

வீட்டு ஈ

தைச் சேர்ந்ததாயினும் பூச்சிகளுக்கு உள்ளது போல் ஈக்களுக்கு நான்கு இறக்கைகள் இல்லை. அவற்றுக்கு இரண்டே இறக்கைகள்தான் உள்ளன. தேனீ, ஈயைப் போன்று இருப்பினும் அஃது ஈ வகையைச் சேர்ந்ததன்று.

ஈக்கள் பெரும்பாலும் பகலிலேதான் காணப்படும். அழுகி நாற்றமெடுத்த இடங்களில் ஈக்கள் கூட்டமாக இருக்கும். சாணம், மலம், அழுகிய பொருட்கள், குப்பைகள் இவையே ஈக்கள் இருக்குமிடங்கள். வீட்டில் அசுத்தப் பொருட்கள் இருப்பின் அங்கேயும் ஈக்கள் மொய்க்கும். இவை முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்வதும் இத்தகைய அசுத்த இடங்களிலேயேயாகும். வெண்மை நிறமான ஈக்களின் முட்டைகளிலிருந்து பத்து நாட்களுக்குள் புழுக்கள் வெளிப்பட்டு லார்வாக்களாகின்றன. பின் கூட்டுப்புழுவாகி அதன் பின் முழுவடிவில் ஈயாக உருவெடுக்கின்றன. பெண் ஈ ஒரே சமயத்தில் 150 முட்டைகளிட்டு இனப் பெருக்கம் செய்கின்றன.

பெரிதான ஈயின் தலையில் கூட்டுக் கண்கள் அமைந்துள்ளன. இவை தலையின் இரு பகுதிகளிலும் உள்ளன. ஒவ்வொரு கண்ணிலும் 4, 000 நுண்கண்கள் அமைந்துள்ளன. இவை நெருக்கமாக உள்ளன. இவை கூட்டுக் கண்களாகும். இவற்றின் உதவியால் பின் பக்கமுள்ளவற்றையும் ஈயால் பார்க்க முடியும். ஈயால் பகலில் பார்க்க முடியுமே தவிர இரவில் எதையும் பார்க்க இயலாது. இரண்டு கண்களுக்கும் இடையே ஒரு சிறு இடைவெளி