ராஜம் கிருஷ்ணன்
81
மனசுக்கு மிக இதமாக இருக்கிறது. சாமி கும்பிட்டதின் பலனை உடனேயே கண்டுவிட்டாற்போல் நினைக்கிறாள் செவந்தி.
ஜீப் போன பின்பும் தெருவில் இவளையும், வந்தவர்களையும் பற்றியே பேச்சு நடக்கும் என்று அவளுக்குத் தெரியும்.
ரங்கன் மறுநாட் காலையில்தான் வருகிறான். வரும்போதே செய்தி எட்டியிருக்கும் என்று தோன்றுகிறது.
இவள் உழவருக்கு ஒரு வார்த்தையைப் பற்றி விட்டாள். ஆடிப்பட்டம் விதைத்தவர்கள், பயிர் நேர்த்திக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். பூச்சிக்கு விளக்குப் பொறிதான் அன்றைய பேச்சு.
இனி நிதமும் கேட்க வேண்டும். ரேடியோவின் மீதிருந்த வெறுப்பு மாறி விட்டது. அது முடிந்து செய்திகள் வருகின்றன.
செவந்தி அதைக்கேட்டுக் கொண்டே, முதல் நாள் வைத்த எண்ணெய்ச்சட்டியில் இருந்த எண்ணெயை வடித்துச்சுத்தம் செய்கிறாள். ரேடியோ சமையலறைக்கு வெளியே வாயிற்படியில் இருந்து சிறிது எட்டி வைத்திருக்கிறது.
"காபி கூபி இருக்கா?” என்று கடுகடுப்பாக அவன் பார்க்கிறான்.
“அட... ? நீங்க எந்த பஸ்ஸூக்கு வந்தீங்க? ராவே வந்துட்டீங்களா?”
“இப்பத்தா வாரேன். எனக்குத் தலைவலிக்கிது. காபி கொண்டா. மாத்திர சாப்பிடணும்...”
அப்போது அங்கு சரவணன் ஒடி வந்து அவளிடம் ஒரு சீட்டைக் கொடுக்கிறான். “ஒராளு வந்திருக்காரு. இதை உங்ககிட்டக் கொடுக்க சொன்னாரு..”
பாப்பாம்மாள் என்று எழுதி இருக்கிறது.