பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

கோடுகளும் கோலங்களும்

 “இருக்கட்டும். அதுக்குள்ள கன்னு போடாது. நீ உள்ளற வந்து வந்தவங்கள வாங்கன்னு சொல்லு?”

ஒ.... பெரியம்மா.... உடம்பு முகம் ஒரே செழிப்பில் மிதப்பது தெரிகிறது. கழுத்தில் பட்டையாக இரண்டு வரிச் செயின். காதுகளில் பெரிய தங்கத்தோடு. மூக்குப் பக்கங்களில் அன்னமும் பூவாளியுமாக மூக்குத்திகள். கைகளில் வளையல்கள். வெள்ளை ரவிக்கை. நீலத்தில் பூப்போட்ட பாலியஸ்டர் சேலை. வெள்ளை இழையோடிய முடியை இழைய வாரிக் கொண்டை போட்டிருக்கிறார்.

பலகையில் உட்கார்ந்து அம்மாவுடன் பேசுகிறார்.

“பெரியவன்தான் ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்ணுகிறான். முத்துய்யா, கண்ணன், ஜயகுமார் நற்பணி மன்ற செயலாளன். தமிழ்நாடு மிச்சூடும் இளைஞர் மன்றத்துக்கும் அவந்தா. நிதம் கூட்டம், நிதம் மீட்டிங். வூட்ல தங்க நேரமில்ல. ஆளு காரு வாசல்ல வந்திடும். புதுசா, நாகரகேணில வூடுகட்டிட்டிருக்கு. இது ராசியான எடம், இத்தவுட்டுப் போகக் கூடாதுன்னு குமார் சொல்லுறான். அவன் எக்ஸ்பர்ட் கம்பெனில ஆறாயிரம் சம்பாதிக்கிறான். பொஞ்சாதி முழுவாம இருக்கா. அவப்பன் துபாயில இருக்கிறான். நான் போறேன்னு பயமுறுத்திட்டிருக்கிறான். காலம் எப்படி மாறிப் போச்சுங்கற செங்கோலு!காசு..... காசுதா.... மாசத்துல ரெண்டு நா ஒட்டல்ல போயி சாப்பிட்டு ரெண்டாயிரம் செலவு பண்ணுறா குமார். குடும்பத்தோட ஆமா, எனக்கென்னத்துக்குடான்னா, கேக்கமாட்டா. போன மாசம் இப்பிடித்தா..... ஏஸி ஒட்டல்ல கூட்டிட்டுப் போனா காரு காரா வாறாங்க. எங்கதா பணம் இருக்குதோ? சிக்கன் எழுபதோ? இன்னமோ சொன்னான். சும்மா சொல்லக் கூடாது. நல்லாதான் இருந்திச்சி. என்னமோ அவுங்க இதெல்லாம் அநுபவிக்காம போயிட்டாங்க. அப்படியே ஒரு சினிமாக்குக் கூட்டிப் போனா. ஜெயகுமார் படம்.... எல்லாம் ஏசிதா. புதுசாகட்டுற வூடு கூட ஏசி பண்ணப் போறாங்க....”

செவந்திக்கு இந்தப்பெருமைகளைக் கேட்டு எரிச்சல் மண்டுகிறது.