பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


10


“மாடு கட்டிப் போரடிச்சா மாளாதுன்னா” சொல்லி, “டிராக்டர் கட்டிப் போரடிக்கும் அழகான கரும்பாக்கம்...”

கன்னியப்பனுக்கு ஒரே சந்தோசம். ஏதேதோ சினிமாப் பாட்டுக்கள். அவன் குரலில் மீறி வருகின்றன.

எப்போதும் வரும் முத்தய்யா, வேல்ச்சாமி, கன்னியப்பனின் ஆயா என்று பெண்கள்...

சாவடியை அடுத்த முற்றம் போல் பரந்த மேட்டில் கதிர்களைப் பரப்பிப் போடுகிறார்கள். பண்ணை வீட்டு டிராக்டர் பத்து ரவுண்டு வந்தால் போதும். நெல்மணிகள் கலகலக்கும். அப்பா வந்திருக்கிறார். சரோ படிப்புக்குப் போய் விட்டாள். சரவணன் டிராக்டரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கிறான். ரங்கன் எப்போதுமே களத்து மேட்டுக்கு வந்ததில்லை. அம்மாவும் கூட அதிசயமாகச் சாவடிப் பக்கம் நெல் தூற்ற முறத்துடன் வந்திருக்கிறாள். அம்முவும் நெல் தூற்றுகிறாள்.

எவ்வளவு மூட்டை காணுமோ?

வங்கிக் கடனை அடைத்து, தோடு ஜிமிக்கியை மீட்க வேண்டும். சாந்தி ஓடி வருகிறாள்.

“கையை குடுங்கக்கா” கையில் கதிர்க் கற்றையுடன் பற்றிக் குலுக் குலுக்கென்று குலுக்குகிறாள்.

ஒரே சந்தோசம். வெயிலில் உழைப்பு மணிகள் முகத்தில் மின்னுகின்றன.

“விடு. விடு சாந்தி அருவா...”

அப்போதுதான் பார்க்கிறாள். நீலச்சட்டையும் ஒட்டு மீசையும் காமிராவுமாக அவள் புருசன் படம் பிடிப்பதை.

“ஐயோ இதென்ன சாந்தி?”