பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

கோடுகளும் கோலங்களும்

பொன்னின் மணிகளே.

நெற்குவியலுக்கு முன் கர்ப்பூரம் காட்டிக் கும்பிடுகிறாள்.

பொரி கடலைப் பழம் படைக்கிறாள்.

அப்பா ஒரு பக்கம் சுந்தரியும் கன்னியப்பனும் தூற்றிவிட்ட நெல்லைச் சாக்கில் அள்ளுகிறார்.

“அப்பா நெல்லு நெடி. நீங்க போங்க... இருமல் வந்திடப் போவுது வேணி.. வந்து சாக்கப் புடிச்சிக்கம்மா..”

“இருக்கட்டும்மா, புது நெல்லு, ஒண்னும் ஆவாது. இந்த நெடிதா நமக்கு உள் மூச்சு. எம் பொண்ணு நின்னுக்கிட்டா, நா உசந்துடுவே..”

“எல்லாம் அந்த ஆபீசர் அம்மாக்குச் சொல்லுங்க.”

“ஆமாம்மா. மகாலட்சுமிங்க போல அவங்க வந்தாங்க, நாங்கூட இவங்க என்ன புதுசாச் செய்யப் போறாங்க. எத்தினி யூரியா போட்டும் ஒண்ணும் வெளங்கல. பூச்சி புகையான் வந்து போவுது. ஏதோ போடணுமேன்னு போட்டுச் சாப்புடறோம். செலவுக்கும் வரவுக்கும் சரிக்கட்டிப்போவுது. உழுதவங் கணக்குப் பாத்தா உழக்கு மிஞ்சம்பாங்க. அதும்கூட செரமமாயிருக்குன்னுதாம்மா நெனச்சே.”

மூட்டைகளைக் குலுக்கி எடுக்கிறார். செலவு போக, ஏறக்குறைய ஒன்பது மூட்டைகள் கண்டிருக்கின்றன.

எப்போதும் வரும் ஆண் பெண் சுற்றார்கள் கூலி பெறுபவர்கள். சுந்தரி காபி கொண்டு வந்து கொடுக்கிறாள்.

மூட்டைகளைத் தட்டு வண்டியில் போட்டுக் கொண்டு முதலியார் போகிறார். மூன்று மூட்டைகளைச் செலவுக்கு வைத்திருக்கிறாள்.

ஆறு மூட்டைகள்... ஆயிரத்து எழுநூற்று ஐம்பது ரூபாய், சுளையாகக் கைகளில்...

அப்பா செவந்தியின் கைகளில் கொடுக்கிறார்.

வாங்கிக் கொண்டு களத்து மேட்டிலேயே அப்பன் கால்களைத் தொட்டுக் கும்பிடுகிறாள்.